அப்பாவித் தமிழர்கள் தொடர் படுகொலை - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கவலை
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பல மாதங்களாக நடந்து வரும் நிலையில் இதுகுறித்து இங்கிலாந்து, பிரான்ஸ், மெக்சிகோ போன்ற சில நாடுகளின் முயற்சியால் அவ்வப்போது அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விவாதித்து வந்தது.
இந்த நிலையில் முதன் முதலாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், இலங்கை இனப் படுகொலை குறித்து அதிகாரப்பூர்வமாக விவாதித்துள்ளது.
அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்பாவி மக்களைக் காக்க இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் உறுதியுடன் செயல்பட வேண்டும் எனவும் அது கோரியுள்ளது.
புதன்கிழமை கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இலங்கை போர் குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த விவாதத்தில் சில நாட்களுக்கு முன்பு முள்ளிவாய்க்கால் பகுதியில் விடிய விடிய இலங்கை ராணுவம் நடத்திய மிகக் கொடூரமான பீரங்கித் தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
விவாதத்திற்குப் பின்னர் பாதுகாப்பு கவுன்சில் சார்பி்ல் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், இலங்கையின் வட கிழக்கில் மனிதாபிமான நெருக்கடி மேலும் மோசமடைந்து வருவது குறித்து கவுன்சில் உறுப்பினர்கள் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர்.
குறிப்பாக, சமீப நாட்களில் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்திருப்பது குறித்து பெரும் கவலை தெரிவிக்கப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மேற்கொண்டு வரும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, தங்கள் வசம் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும்.
மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மீது இலங்கைப் படைகள் பீரங்கித் தாக்குதல்களை நடத்துவது கடும் கவலை தருகிறது.
இந்தப் பிரச்சினையை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தனிப்பட்ட முறையில் கையாள வேண்டும் என்ற கோரிக்கைக்கு பாதுகாப்பு கவுன்சில் ஆதரவு தெரிவிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக கவுன்சிலில் இலங்கைப் பிரச்சினை குறித்து விவாதிக்கத் தேவையில்லை. அது உள்நாட்டுப் பிரச்சினை என சீனா, ரஷ்யா, வியட்நாம் உள்ளிட்ட சில நாடுகள் கூறி வந்தன. ஆனால் கடந்த வார இறுதியில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதலை சுட்டிக் காட்டிய இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான மனிதாபிமான நெருக்கடி இது என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து ரஷ்யா போன்ற நாடுகள் விவாதத்திற்கு இறங்கி வந்தன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்தத் தீர்மானம் இலங்கையை எந்த வகையிலும் நிர்பந்திக்காது என்ற போதிலும், சர்வதேச அளவிலான அழுத்தம் அதன் மேல் கூடுவதற்கு இது உதவும்.
பாதுகாப்பு கவுன்சில் எடுத்துள்ள முக்கிய தீர்மானம் இது என்று இங்கிலாந்து இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ளது.
இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா ஆகிய நாடுகள், அமெரிக்காவுடன் இணைந்து இந்த தீர்மானத்தை கொண்டு வந்தன. பாதுகாப்புக் கவுன்சிலில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் இதை ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.