பாஜகவுக்கு ஆதரவு தரும் பேச்சுக்கே இடமில்லை: பாஸ்வான்
இதுகுறித்து அவர் கூறுகையில், மத்தியில் தாமரை மலர நான் எக்காரணம் கொண்டும் உதவியாக இருக்க மாட்டேன். அதை அனுமதிக்கவும் முடியாது.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைய நாங்கள் ஆதரவு தர மாட்டோம். மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமையவே நாங்கள் பாடுபடுகிறோம்.
தேர்தலுக்குப் பிந்தைய நிலை குறித்து நாங்கள் மட்டுமல்லாமல் ஆர்.ஜே.டி, சமாஜ்வாடிக் கட்சி ஆகிய நான்காவது அணிக் கட்சிகள் அனைத்தும் இணைந்துதான் முடிவு எடுப்போம்.
நான் இன்னும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில்தான் நீடிக்கிறேன். அந்த அரசின் அமைச்சராகவும் இருக்கிறேன்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மை பெற்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு வேளை கிடைக்காவிட்டால், நான்காவது அணித் தலைவர்கள் கூடி விவாதித்து முடிவெடுப்போம். எப்படி இருப்பினும் மதச்சார்பற்ற அரசுதான் மத்தியில் அமையும் என்றார்.
முன்னதாக பாஜக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத் யாதவ் மற்றும் இன்னொரு கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக்தள தலைவர் அஜீத் சிங் ஆகியோர் பாஸ்வானை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து பாஸ்வான் பாஜகவுக்கு ஆதரவாக மாறப் போவதாக செய்திகள் எழுந்தன. இதையடுத்தே மேற்கண்ட விளக்கத்தை அளித்தார் பாஸ்வான்.
இதேபோல 2 நாட்களுக்கு முன்பு பாஜக ராஜ்யசபா உறுப்பினர் நஜ்மா ஹெப்துல்லாவும் பாஸ்வானை சந்தித்துப் பேசினார்.
பாஸ்வானை மேற்கண்ட தலைவர்கள் சந்தித்துப் பேசியது குறித்து பாஸ்வான் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் காலிக் கூறுகையில், பாஸ்வான் வீட்டில் நடந்த தீவிபத்து குறித்து விசாரிக்கவே இவர்கள் வந்தனர். மற்றபடி அரசியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றார்.