வன்னியில் போர் உக்கிரம் - கொழும்பு விரைந்தார் விஜய் நம்பியார்
நியூயார்க்: இலங்கையில் அதிகரித்து வரும் மனிதாபிமான அவலத்தைத் தீர்ப்பது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், மீண்டும் தனது சிறப்புத் தூதர் விஜய் நம்பியாரை கொழும்புக்கு அனுப்புகிறார். அவர் கொழும்புக்கு விரைகிறார்.
இதுகுறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மாரி ஒக்காபே, மனிதாபிமான சிக்கலை தீர்ப்பதில் இலங்கை க்கு உதவுவதற்காக தனது சிறப்புத் தூதராக விஜய் நம்பியாரை கொழும்புக்கு அனுப்பி வைக்க ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தீர்மானித்துள்ளார்.
அதிபர் ராஜபக்சேவுடனும் பான் கி மூன் தொலைபேசியில் பேசி அதிகரித்து வரும் மக்கள் பேரவலம் குறித்து கவலை தெரிவித்தார் என்றார்.
இதையடுத்து இன்றே கொழும்பு விரைகிறார் விஜய் நம்பியார். தமிழர் பகுதிகளில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசிடம் அவர் பேசுவார் எனத் தெரிகிறது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக விவாதம் நடத்தியதற்கு அடுத்த நாளே தனது சிறப்புத் தூதரை அனுப்ப பான் கி மூன் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சில வாரங்களுக்கு முன்புதான் விஜய் நம்பியார் கொழும்பு சென்று திரும்பினார். அங்கு தான் கண்டது, கேட்டது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் அவர் விளக்கியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.