தமிழகத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு படுதோல்வி
சென்னை: தமிழக மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டுமே தலா ஒரு தொகுதிகளில் வென்று ஆறுதல்பட்டுக் கொண்டுள்ளன.
தமிழகத்தில் திமுக கூட்டணியின் ஒற்றுமையில் முதல் கல்லை விட்டெறிந்தவர்கள் இந்த கம்யூனிஸ்டுகளே. கடந்தமுறை தங்கள் அணியில் ஏராளமான கட்சிகள் இருந்தாலும், இ கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரு இடங்களைக் கொடுத்து கெளரமாகவே நடத்தினார் திமுக தலைவர் கருணாநிதி.
ஆனால் ஈழத் தமிழர் பிரச்சினையைக் காரணம் (இவர்களுக்கு அதில் எந்த அளவு அக்கறை, எந்த அளவு முரண்பாடுகள் இருந்தன என்பதை மக்கள் அறிவார்கள்!) காட்டி, ஜெயலலிதாவின் அதிமுக பக்கம் சாய்ந்தார்கள்.
கம்யூனிஸ்ட்டுகள் பின்னாலேயே போனவர்தான் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸும்.
இவர்களின் வருகையால் தெம்படைந்த ஜெயலலிதா, இரு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா 3 இடங்களை ஒதுக்கினார். ஆனால் எந்தெந்த இடங்கள் என்பதை மட்டும் சொல்லாமல் இழுத்தடித்தார்.
ஆனால் எல்லாருக்கும் பின்னால் வந்த பாமகவுக்கு மட்டும் கேட்ட இடங்களையும், கேட்டதற்கும் அதிகமான எண்ணிக்கையில் தொகுதிகளையும் கொடுத்து தாங்கு தாங்கென்று தாங்கினார்.
இந்தக் களேபரத்தில் சிக்கி விழிபிதுங்கியது வைகோவின் மதிமுக. இந்தக் கட்சிக்கு 3 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முன்வந்தார் ஜெயலலிதா. அதுவும் அவர்கள் கேட்ட தொகுதிகள் இல்லை. ஒரு கட்டத்தில் அதிமுக கொடுத்த தொகுதிகளை வாங்கிக் கொண்டது இ கம்யூனிஸ்ட். ஆனால் மதிமுகவும் - மார்க்சிஸ்ட்டும் மட்டும் ஒரே தொகுதிக்கு குறிவைத்து மல்லுக்கட்ட, அமைதியாக வேடிக்கைப் பார்த்தார் ஜெயலலிதா.
ஒருவழியாக கூட்டணி களேபரங்கள் முடிந்து பிரச்சாரத்துக்கு கிளம்புகையில், ஜெயலலிதா திடீரென்று தனி ஈழம் என்று கொடி பிடிக்க, கம்யூனிஸ்டுகள் வழக்கம் போல தங்கள் வேலையை ஆரம்பித்தனர். கூட்டத்திலிருந்தாலும் 'நாங்கள் தனி' என்று விதண்டாவாதம் பேசும் அவர்கள், தனி ஈழம் கொள்கையில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றனர் மார்க்சி்ஸ்டுகள்.
இப்படி ஏகப்பட்ட சுருதிபேதங்களோடு களம் கண்ட கம்யூனிஸ்டுகள், ஜெயலலிதாவின் வாக்கு வங்கி, வைகோவின் பிரச்சாரம் தங்களுக்கு பெரிதும் உதவும் என நம்பினர்.
ஆனால், அது நடக்கவில்லை.
தொழில் நகரமான கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸின் ஆர்.பிரபுவை 38664 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
மதுரையில் போட்டியிட்ட மோகனின் ரிசல்ட் முன்பே எதிர்பார்க்கப்பட்டதுதான்.
தென்காசி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லிங்கம் 33 ஆயிரத்து 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வட சென்னையில் தா.பாண்டியனின் தோல்வி அக்கட்சியே எதிர்பாராத ஒன்றுதான். நாகையிலும் இந்திய கம்யூனிஸ்ட் படுதோல்வியைத் தழுவியுள்ளது.
கம்யூனிஸ்ட்டுகள் வென்ற இடங்கள்:
1. தென்காசி-சிபிஐ லிங்கம் வெற்றி:
தென்காசி தொகுதியில், சிபிஐ வேட்பாளர் லிங்கம் 33 ஆயிரத்து 368 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பெட்டிக்கடைக்காரரான லிங்கம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெள்ளைப் பாண்டியை விட கூடுதலாக 33 ஆயிரத்து 368 வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார்.
இத்தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 3வது இடத்தையே பெற்றார். இத்தொகுதியை, சிபிஐ தக்க வைத்துக் கொண்டுள்ளது.
மொத்த வாக்குகள்: 10,51,089
பதிவானவை: 7,44,817
லிங்கம் (சிபிஐ)- 2,74,978
வெள்ளைப்பாண்டி(காங்)-2,41,610
கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)-1,12,202
2. கோவை - சிபிஎம்மின் நடராஜன் வெற்றி
கோவை லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.பிரபுவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான பி.ஆர்.நடராஜன் வென்றார்.
ஆரம்பத்திலிருந்தே நடராஜன் முன்னணியில் இருந்து வந்தார். இறுதியில், பிரபுவை, 38 ஆயிரத்து 664 வாக்குகள் வித்தியாசத்தில் நடராஜன் வெற்றி பெற்றார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்
பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்) - 2,93,165
ஆர்.பிரபு (காங்கிரஸ்) - 2,54,501.