அதிர்ச்சியில் பாமக..போட்டியிட்ட எல்லா இடங்களிலும் தோல்வி
சென்னை: திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளாலும் தவிர்க்க முடியாத கட்சி என கருதப்பட்டு வந்த பாமகவுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கும் வகையில், 2009 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
கடந்த லோக்சபா தேர்தலை திமுகவுடன் சேர்ந்து சந்தித்தது பாமக. ஆனால் இந்த முறை அதிமுகவுடன் இணைந்து சந்தித்தது.
பாமக கூட்டணி குறித்து முடிவெடுக்க எடுத்துக் கொண்ட நாட்களும், செய்த ஆலோசனைகளும், நடத்திய பேச்சுவார்த்தைகளும் நாடறிந்தவை. வாக்குப் பதிவு நடத்தி கூட்டணியைத் தேர்ந்தெடுத்து புது வரலாறு படைத்தது பாமக.
இப்படி ஏகப்பட்ட டிராமாக்களுடன் அதிமுக கூட்டணிக்கு வந்த பாமக, முன்கூட்டியே கறாராக பேசி 7 தொகுதிகளை வாங்கிக் கொண்டது.
இது அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக, இடதுசாரி கட்சிகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. காரணம், இவர்கள் கேட்ட தொகுதிகளைக் கொடுக்க ஜெயலலிதா அவ்வளவு பிடிவாதமாக மறுத்தார். ஆனால் பாமக கேட்ட தொகுதிகளையெல்லாம் தூக்கிக் கொடுததார்.
ஆனால் இன்றைய தேர்தல் முடிவுகள் ஜெயலலிதாவின் முடிவை தவறு என்று நிரூபிக்கும் வகையில் அமைந்து விட்டன.
பாமகவுக்குக் கொடுக்கப்பட்ட ஏழு தொகுதிகளிலும் அது தோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீபெரும்புதூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி ஆகிய தொகுதிகளில் கூட பாமகவால் வெல்ல முடியாத நிலை.
பாமக தோன்றியதற்குப் பிறகு அது சந்தித்துள்ள மிகப் பெரிய தோல்வி இது என்று கூறலாம். ஆரம்பத்தில் அது தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்தாலும் கூட தவிர்க்க முடியாத வட மாவட்ட அரசியல் சக்தியாக உருவெடுத்த பின்னர் கிடைத்துள்ள மிகப் பெரிய அடி இதுவே.
உண்மையில் பாமகவுடன் சேர்ந்ததால் அதிமுகவுக்குத்தான் அதிக லாபம் கிடைத்துள்ளது. காரணம், விஜயகாந்த்தால் ஏற்பட்ட பாதிப்பை ஓரளவு பாமகவை வைத்து சமாளித்து விட்டது.
ஆனால் விஜயகாந்த்தின் தாக்கத்தால் பாமக படு தோல்வியை சந்தித்துள்ளது. அதேசமயம், தனது வாக்கு வங்கியையும் அது இழந்து விட்டதையே இது காட்டுகிறது.
அரசியல் ரீதியாக பாமகவின் எதிர்காலத்தையே ஆட்டிப் பார்க்கும் வகையிலான தேர்தல் முடிவு இது என்பதால் பாமக வட்டாரம் பெருமளவில் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
காடுவெட்டி குரு படுதோல்வி:
பாமக வேட்பாளர்களிலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாமகவின் காடுவெட்டி குரு, திருவண்ணாமலையில் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளார்.
திருவண்ணாமலையில் காடுவெட்டி குருவை எதிர்த்து, திமுக சார்பில் வேணுகோபால் நிறுத்தப்பட்டார். திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவர் வேணுகோபால். திருப்பத்தூர் தொகுதி எம்.பியாக இருந்தவர்.
காடுவெட்டி குருவின் சவாலை சமாளிக்கும் வகையில் அனுபவம் வாய்ந்த வேணுகோபாலை நிறுத்தியது திமுக.
ஒரு சுற்று கூட விடாமல் வேணுகோபால் தொடர்ந்து முன்னணி வகித்து வந்தார். இறுதியில், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 690 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார் குரு.