அனைத்துத் தமிழர்களும் மீட்கப்பட்டு விட்டனர்: ராணுவம்
கொழும்பு: விடுதலைப் புலிகள் வசம் இருந்த அனைத்துத் தமிழர்களையும் மீட்டு விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் தற்போது கடைசியாக உள்ள பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக ராணுவம் திடீரென அறிவித்துள்ளது.
இதனால் அங்கு சிக்கியிருக்கிற அத்தனை பேரையும் மொத்தமாக அழித்து விட்டு, அனைவருமே விடுதலைப் புலிகள் என கூற இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், கடந்த 3 நாட்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை ராணுவம் மீட்டுள்ளது.
தற்போது விடுதலைப் புலிகள் வசம் அப்பாவி மக்கள் யாரும் இல்லை. மனிதக் கேடயங்களாக இருந்த அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர் என்றார்.
அனைத்துத் தமிழர்களையும் மீட்டு விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளதால், இனி புலிகள் உள்ள கடைசிப் பகுதிக்குள் ராணுவம் பெருமளவில் புகுந்து தனது கடைசிக் கட்டத் தாக்குதலை மேற்கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ராணுவத்தின் தொடர் நடவடிக்கையால் நேற்று மட்டும் 3000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இன்று காலை முதல் பல நூறு பேர் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கையிலிருந்து தகவல்கள் வந்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று காலை படகு மூலம் தப்பிச் செல்ல முயன்ற 70 விடுதலைப் புலிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. அதில் பிரபாகரன் இல்லை என்று பின்னர் ராணுவம் தெரிவித்தது.