14வது லோக்சபாவை கலைத்தார் ஜனாதிபதி
டெல்லி: 14வது லோக்சபாவைக் கலைக்குமாறு கோரி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்து மத்திய அமைச்சரவையில் இன்று பரிந்துரை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து இந்தத் தீர்மானம் அடங்கிய கடிதத்தை ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்து பிரதமர் மன்மோகன் சிங் வழங்கினார். இதையடுத்து மக்களவை கலைக்கப்பட்டது.
மன்மோகன் சிங் ராஜினாமா:
மேலும் மன்மோகன் சிங் தனது ராஜினாமா கடிதத்தையும் வழங்கினார்.
இந்தக் கடிதத்தை பெற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர், அடுத்த அரசு அமையும் வரை பொறுப்புகளை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக இன்று காலை 14வது நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையின் கடைசி அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.
இதையடுத்து அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரமதரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து மன்மோகன் சிங், பிரதீபா பாட்டீலை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும், அமைச்சர்களின் கடிதங்களையும் ஒப்படைத்தார். மக்களவையையும் கலைக்கக் கோரினார்.
இதையடுத்து புதிய அரசமைப்பது தொடர்பான நடவடிக்கைகள் வேகம் பிடித்தன.
தலைமைத் தேர்தல் ஆணையரும், பிற தேர்தல் ஆணையர்களும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை இன்று மாலை சந்தித்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களின் பட்டியலை அளிக்கவுள்ளனர். இதையடுத்து 15வது லோக்சபா தேர்வு குறித்த முறைப்படியான அறிவிப்பு வெளியாகும்.
இதையடுத்து மீண்டும் ஆட்சியமைக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாளை ஜனாதிபதி அழைப்பு விடுப்பார்.