வாஜ்பாயை போல அத்வானி ஒதுங்க வேண்டும்-ஜோஷி
டெல்லி: வாஜ்பாயைப் போல அத்வானியும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்து கட்சியை 'வழிநடத்த' வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் அத்வானியின் தீவிர எதிர்ப்பாளருமான முரளி மனேகர் ஜோஷி கூறியுள்ளார்.
தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், கட்சியின் தலைவர் பதவியையோ மக்களவை கட்சித் தலைவர் நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், கட்சி ஆணையிட்டால் பதவிகளை ஏற்க நான் தயார்.
தேர்தல் திட்டமிடலில் ஆரம்பித்து வேட்பாளர் தேர்வு, பிரச்சார ஸ்டைல் என அனைத்திலும் பாஜக தோல்வியடைந்துவிட்டது.
உத்தரப் பிரதேசத்தி்ல் அவர்கள் (அத்வானி-அருண் ஜேட்லி) விரும்பியவர்களுக்கு எல்லாம் சீட்டைக் கொடுத்தார்கள். அங்கு முஸ்லீம்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரசுக்கு ஓட்டு போட்டு எங்களை தோற்கடித்துவிட்டார்கள். பாஜகவும் கூடுதலாக முஸ்லீம்களுக்கு சீட் தந்திருந்தால் இதைத் தடுத்திருக்கலாம்.
அத்வானி என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். வாஜ்பாயைப் போல அவரும் கடசியை வழி நடத்தலாம் என்றார்.
வாஜ்பாயைப் போல என்று கூறியுள்ளதன் மூலம் அத்வானி கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதை மறைமுகமாகக் கூறியுள்ளார் ஜோஷி.
எதிர்க்கட்சி தலைவர்-அத்வானி தொடர்வார்:
இந் நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட விருப்பம் இல்லை என்று கூறி வந்த பாஜக தலைவர் அத்வானி, தற்போது அப்பதவியை ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணிக்கு தேர்தலில் ஏற்பட்ட படு தோல்வியால் விரக்தியாகி விட்ட அத்வானி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி்த தலைவராக செயல்பட தான் விரும்பவில்லை என்று கூறி விட்டார்.
இதையடுத்து பாஜக தலைவர்கள் அவரை சமாதானப்படுத்திப் பார்த்தனர். ஆனால் அவர் இறங்கி வரவில்லை. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர் ஏற்பதாக இல்லை.
இதைத் தொடர்ந்து அத்வானிதான் எதிர்க்கட்சி் தலைவராக வேண்டும். இல்லாவிட்டால் யாரையும் தலைவராக தேர்ந்தெடுக்க மாட்டோம் என பாஜக தலைவர்கள் கூறி விட்டனர்.
இந்த நிலையில், அத்வானி தனது பிடிவாதத்திலிருந்து இறங்கி வந்துள்ளார்.
இதுகுறித்து கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், பாஜக நாடாளுமன்றக் குழுத் தலைவராக தொடர்ந்து செயல்பட அத்வானி ஒப்புக் கொண்டுள்ளார். எனவே லோக்சபாவில் அவர்தான் பாஜக தலைவராக செயல்படுவார்.
அத்வானியின் தலைமை அவசியம் தேவை என்பதை நாடாளுமன்றக் கட்சிக் குழு தீர்மானித்து அதை அத்வானியிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. அதை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார் என்றார் சிங்.