பிரபாகரன் கொலை-இலங்கை முழுவதும் உஷார் நிலை
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதால், தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற அச்சத்தில் தலைநகர் கொழும்பு மிக பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் அனைவரும் இன்று காலை நடந்த சண்டையில் கொல்லப்பட்டு விட்டனர்.
இதையடுத்து தலைநகர் கொழும்பு பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற அச்சத்தால், உச்சகட்ட உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர் முழுவதும் ராணுவம் ரோந்து சுற்றி வருகிறது. இதேபோல நாட்டின் பிற பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இயல்பு நிலை - பிரதமர் விக்கிரமநாயகே
இதற்கிடையே, பிரபாகரன் மரணம் குறித்து பிரதமர் ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே கூறுகையில், பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார். விடுதலைப் புலிகள் வசம் இருந்த அனைத்துப் பகுதிகளையும் நாங்கள் மீட்டு விட்டோம்.
விரைவில் இலங்கையில் இயல்பு நிலை திரும்பும் என்றார்.