தமிழக இருட்டை போக்குமா காற்றாலை மின்சாரம்?
நாட்டிலேயே தமிழகத்தில்தான் காற்றாலை மூலம் அதிக மின்னுற்பத்தி நடக்கிறது. 70 சதவிகித காற்றாலைகள் தமிழகத்திலேயே அமைந்துள்ளன.
இந்தச் சூழலில் தமிழகத்தில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. அதிக விலை கொடுத்து பிற மாநிலங்களில் மின்சாரம் வாங்கி சமாளித்துவரும் தமிழகம், காற்றாலை மின்சார உற்பத்தியைச் சரியாகப் பயன்படுத்தி நிலைமையைச் சமாளிக்க திட்டமிட்டுள்ளது.
கடந்த வாரத்தில் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பெருமளவு மின்சார உற்பத்தியை தமிழக காற்றாலைகள் தந்தன (முறையே 41.16 மற்றும் 34.72 மில்லியன் யூனிட்). சனிக்கிழமை மட்டும் இந்த நிலையில் வீழ்ச்சி காணப்பட்டது. அன்று 16 மில்லியன் யூனிட் மட்டுமே மின்சாரம் உற்பத்தியானது.
நாட்டிலேயே மின் உற்பத்திக்கு சாதகமான காற்று அதிகம் வீசுவது தமிழகத்தில்தான் என்பதால் இங்கு மேலும் அதிக எண்ணிக்கையில் காற்றைலைகள் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் தமிழகத்தில் மின்வெட்டை அறவே நீக்க முடியும் என்றும் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.