பான் கி மூன் 22ம் தேதி கொழும்பு பயணம்
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் வரும் 22ம் தேதி ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தீவிரமாக இருந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படு கொலை செய்யப்பட்டு வருவது குறித்து பான் கி மூன் கவலை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நீங்களே நேரில் வந்து பாருங்கள் என்று கூறி, இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் ராஜபக்சே. இருப்பினும் பான் கி மூன் அதுகுறித்து பதில் ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில் வருகிற 22ம் தேதி பான் கி மூன் இலங்கை வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்சே அழைப்பை ஏற்று பான் கி மூன் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பான் கி மூன் கொழும்பு வரும் நாளன்று, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வென்றதைக் கொண்டாடும் வகையில் பேரணி ஒன்றை நடத்தவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
கொரில்லா தாக்குதலுக்கு வாய்ப்பு - ஐ.நா.
இதற்கிடையே, தமிழர்களின் மூலப் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை அரசு தவறினால், விடுதலைப் புலிகள் கொரில்லாத் தாக்குதல்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது என்று ஐ.நா. மனிதாபிமானப் பிரிவு சிறப்பு பிரதிநிதியான ஜான் ஹோம்ஸ் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழர்களுக்குப் பொருத்தமான சுயாட்சியை வழங்க அரசியல் முயற்சிகள் மூலமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் ராணுவ வெற்றியால் எந்தப் பயனும் இல்லை.
போரில் வென்றாலும், தமிழர்களின் மூலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாவிட்டால், அது அமைதியைத் தொலைத்து விடும்.
கொரில்லாத் தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட நேரிடும். இதனால் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சிகலுக்கு பெரும் சிரமம் ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.