பிரபாகரன் மறைந்தது வருத்தம்தான்-கூறுகிறார் கருணா
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கருணாவை கிழக்கு பிராந்திய தளபதியாக வைத்திருந்தார் பிரபாகரன். ஆனால் பிரபாகரனுடன் முரண்பாடு கொண்டு இயக்கத்தை உடைத்தார் கருணா. பின்னர் தனி அமைப்பை உருவாக்கினார்.
ஆனால் இந்த அமைப்பைச் சேர்ந்த பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் இடையே மோதல் மூண்டது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு அவர் பிள்ளையான் கட்சியை விட்டு விலகி ராஜபக்சே கட்சியில் இணைந்து அமைச்சர் பதவியையும் வாங்கிக் கொண்டார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் பலமிழக்க முக்கிய காரணம் கருணாதான். அவர் கூறிய தகவல்களை வைத்துத்தான் கிழக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளை முழுமையாக ஒழித்தது இலங்கை ராணுவம்.
தயா மாஸ்டரும் அடையாளம் காட்டினார்..
இப்போது பிரபாகரனின் உடல் என்று ராணுவம் கூறியுள்ளதையும், கருணாதான் போய் அடையாளம் காட்டியுள்ளார். இதற்காக ஹெலிகாப்டரில் அவரை போர் முனைக்குக் கூட்டிப் போயுள்ளனர். அவருடன் சமீபத்தில் பிடிபட்ட தயா மாஸ்டரையும் அழைத்துச் சென்றுள்ளது ராணுவம்.
இருவரும் சேர்ந்து தங்களது முன்னாள் தலைவரை அடையாளம் காட்டினராம்.
பிரபாகரன் குறித்து கருணா கூறுகையில், இது பிரபாகரன்தான். எந்த சந்தேகமும் இல்லை. அவரது உடலி்ல் எந்த மாற்றமும் இல்லை.
இந்த முடிவை அவரே தேடிக் கொண்டார். அவர் உயிருடன் இல்லை என்பது எனக்கு வருத்தம்தான். ஆனால் யாருடைய பேச்சையும் அவர் கேட்டதில்லை. இனப்பிரச்சினைக்கு ஆயுதப் போராட்டம் மூலம்தான் தீர்வு காண முடியும் என அவர் நம்பினார். பேச்சுவார்த்தை நடத்த பலமுறை அழைக்கப்பட்டபோதும் அவர் போகவில்லை. ஜனநாயக பாதைக்குத் திரும்ப கிடைத்த வாய்ப்புகளையும் அவர் பயன்படுத்திக் கொள்ள மறுத்து விட்டார் என்று கூறியுள்ளார் கருணா.