நடுக்கடலில் தவித்த தமிழர்கள்: பட்டினியால் இறந்த 8 பேர்
ராமேசுவரம்: நடுக்கடலில் ஒரு வாரத்துக்கும் மேலாக தத்தளித்த இலங்கை அகதிகளில் 8 பேர் படகிலேயே இறந்துவிட, அவர்களது உடல்களை கடலில் வீசிவிட்டு 11 பேர் மட்டும் ஒருவழியாக கரை சேர்ந்துள்ளனர்.
இலங்கை முல்லைத் தீவில் இருந்து கடந்த மாதம் படகில் தப்பி வந்த அகதிகள், திசை மாறி ஆந்திரா கடல் பகுதிக்கு சென்றனர். 9 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த அவர்களில் பலர் பட்டினியால் இறந்து விட மீதமிருந்த 11 பேரை ஆந்திர மீனவர்கள் காப்பாற்றி காக்கிநாடாவுக்கு கொண்டு வந்தனர்.
அங்கு சில நாட்கள் தங்க வைக்கப்பட்ட அவர்கள் அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு, பின்னர் கொழும்பு மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 8 மாத குழந்தையும் அடங்கும்.
அவர்களிடம் க்யூ பிரிவு போலீஸாரும், மத்திய புலனாய்வு அமைப்பான ஐபி அதிகாரிகளும் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் கூறுகையில்,
யாழ்பாணத்தை சேர்ந்த நாங்கள் 23 பேர் முல்லை தீவு மத்தாளத்தில் இருந்து கடந்த மாதம் 20ம் தேதி பிளாஸ்டிக் படகில் புறப்பட்டோம். திடீரென சூறைக் காற்று வீசியதால் படகு திசைமாறி ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதிக்கு சென்று விட்டது.
திசை மாறியதால் கரைக்குச் செல்ல வழி தெரியாமல் 9 நாட்களாக நடுக்கடலில் உணவு, நீர் இல்லாமல் தத்தளித்தோம். குழந்தைகள் பசி, பட்டினியால் வாடி அழத்தொடங்கின.
நாட்கள் செல்லச்செல்ல எங்களுடன் வந்த பெண்ணும், 6 குழந்தைகளும் உடல் சோர்வடைந்து ஒவ்வொருவராக பட்டினியால் படகிலேயே இறந்து விட்டனர். வேறு வழியில்லாததால் எங்கள் கண் முன்னே உயிரிழந்த அவர்களை கடலில் தூக்கி வீசிவிட்டோம்.
இதைப்பார்த்து பயந்து போன படகோட்டி மகாலிங்கம், மரியதாஸ், சூசைதாஸ், வாலதாஸ் ஆகியோர் நீந்தி தப்பிவிடலாம் என்று கடலில் குதித்து நீந்திச் சென்றனர். அவர்கள் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.
மேலும் 8 மாத கைக் குழந்தையைக் காக்க தாய்ப் பால் கொடுத்த அதன் தாயாரும் இறந்துவிட்டார்.
மீதமிருந்த நாங்கள்11 பேரும் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த ஆந்திர மீனவர்கள் தான் காப்பாற்றி காக்கிநாடா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் என்றனர்.