அகதிகள் முகாம்கள்-நுழைய அனுமதி கோரும் யுனிசெப்
ஜெனீவா: போரினால் இடம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு தங்களது பணியாளர்களை முழுமையாக அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசுக்கு ஐ.நா. குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து யுனிசெப் அமைப்பின் செயல் இயக்குநர் ஆன் வெனிமேன் விடுத்துள்ள அறிக்கையில், இடம் பெயர்ந்தோர்களுக்கான முகாம்களுக்கு வரும் பொதுமக்கள் உடல் நலக்குறைவுடனும், ஊட்டச்சத்து இல்லாமையிலும், காயங்களுடனும்தான் வருகின்றனர். அவர்களுக்கு ஆரோக்கியமான குடிநீர், சத்தான ஆகாரம், மருந்து ஆகியவை மிகவும் அவசரமாக தேவைப்படுகின்றன.
கடந்த சில நாட்களில் மட்டும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்து வந்துள்ளனர். இதுவரை மொத்தம் 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
போர் காரணமாக இடம் பெயர்ந்து வந்துள்ள அப்பாவி மக்களுக்கு உதவ பலவேறு சர்வதேச உதவிக் குழுக்கள் முயன்று வருகின்றன. யுனிசெப் உள்ளிட்ட அமைப்புகள் குடிநீர், உணவு, அவசரகால மருந்துகள், சமையல் பாத்திரங்கள், குடிநீர் சுத்திகரிக்கும் மாத்திரைகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன.
ஆனால் அனைத்து முகாம்களுக்கும் செல்ல அனுமதிக்காமல் சில முகாம்களுக்கு செல்ல மட்டுமே இலங்கை அரசு அனுமதிக்கிறது.
ஆனால் இடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்கள் அனைத்துக்கும் செல்ல இலங்கை அரசு அனுமதி தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக 10 ஆயிரம் கூடுதல் டென்ட் துணிகளை வழங்குவதைக அகதிகளுக்கான ஐ.நா. ஆணையர் தெரிவித்துள்ளார்.
மேலும், மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தங்க வீடுகள் கட்டித் தருவதற்கு நிலம் ஒதுக்க வேண்டும் எனவும் இலங்கை அரசுக்கு இந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இடம் பெயர்ந்த தமிழர்கள் தற்போது தங்க வைக்கப்பட்டிருக்கும் 42 இடங்களிலும அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், அங்குள்ள மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.