தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க இந்தியா வலியுறுத்தல்
விடுதலைப் புலிகளுடனான போரை முடித்து விட்டோம் என இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியத் தூதர்களாக எஸ்.எஸ்.மேனனும், எம்.கே.நாராயணனும் கொழும்பு சென்றுள்ளனர். இன்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்து தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்துப் பேசவுள்ளனர்.
கொழும்பு கிளம்புவதற்கு முன்பு முதல்வர் கருணாநிதியை நாராயணன் சந்தித்து ஆலோசனை பெற்று சென்றுள்ளார்.
இந்தியாவின் ரூ. 500 கோடி மறுசீரமைப்பு உதவிகள் குறித்தும் இலங்கை அதிபரிடம் மேனன், நாராயணன் குழு சொல்லவுள்ளது. மேலும், என்ன மாதிரியான உதவிகளை இந்தியாவிடமிருந்து இலங்கை எதிர்பார்க்கிறது என்பதையும் இந்தியா கேட்கவுள்ளது.
இந்தப் பயணத்தின்போது முக்கிய அம்சமாக, தமிழர் பகுதிகளி்ல் தமிழர்களுக்கு சுயாட்சி உரிமையை வழங்க வேண்டும். அதிகாரங்களை சம அளவில் பகிர்ந்தளிக்க இலங்கை அரசு முன்வர வேண்டும் எனவும் இந்தியா கோரவுள்ளது.
தங்களது பயணத்தின்போது பிரபாகரன் உண்மையிலேயே இறந்து விட்டாரா என்பதையும் ராஜபக்சேவிடம் தெளிவுபடுத்திக் கொள்ளவும் மேனன், நாராயணன் திட்டமிட்டுள்ளனர்.
டெல்லியில் முதல்வரைச் சந்தித்த பின்னர் வெளியே வந்த நாராயணனிடம் செய்தியாளர்கள், பிரபாகரன் இறந்து விட்டாரா என்று கேட்டதற்கு, எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி அவர் இல்லை. இருப்பினும் இதை நாங்கள் இலங்கை அரசிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வோம். அதன் பிறகு உங்களுக்கும் தெரிவிக்கிறேன் என்று கூறினார் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே இன்னும் ஓரிரு நாட்களில், 30 டன் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை விமானம் மூலம் இந்தியா, இலங்கைக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
அந்த விமானத்தில் 27 பேர் அடங்கிய மருத்துவக் குழுவும் செல்லவுள்ளது. வவுனியாவில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் இந்தக் குழு பணியாற்றும்.