இலங்கைக்கு இந்திய மருத்துவ குழு சென்றது
டெல்லி: 27 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய மருத்துவக் குழு மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்களுடன் இன்று கொழும்பு சென்றடைந்தது.
வவுனியாவில் அமையவுள்ள தற்காலிக கள மருத்துவமனையில் இந்த மருத்துவக் குழு சிகிச்சை பணிகளைத் தொடங்கும்.
இதுகுறித்து மருத்துவக் குழுவுக்குத் தலைமை ஏற்றுள்ள ராணுவ அதிகாரி பிரிகேடியர் சச்தேவா கூறுகையில், இடம் பெயர்ந்து முகாம்களில் உள்ள அப்பாவி மக்களுக்கு இந்திய மருத்துவ குழு சிகிச்சை அளிக்கவுள்ளது.
இந்த மருத்துவக் குழுவில் மொத்தம் 27 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 8 பேர் டாக்டர்கள் ஆவர். கூடவே 25 டன் மருந்துப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்களும் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்றார்.
இந்தியா ஏற்கனவே புல்மோடை பகுதியில், 110 படுக்கைகளக் கொண்ட தற்காலிக மருத்துவமனையை அமைத்துள்ளது. தற்போது இந்த மருத்துவமனை வவுனியாவில் உள்ள மேனிக் பார்ம்ஸ் என்ற இடத்திற்கு மாற்றப்படுகிறது.
நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவுடன் இந்திய விமானப்படை விமானம் இன்று காலை டெல்லியிலிருந்து கிளம்பி, கொழும்பு சென்றடைந்தது.