சிறுநீரக கோளாறு-சிபு சோரன் மகன் மரணம்
போகாரோ: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் சிபு சோரனின் மகனும், அக்கட்சியின் பொது செயலாளருமான துர்கா சோரன் நேற்று சிறுநீரக கோளாறு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 39.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிபு சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இடை தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது மூத்த மகன் துர்கா சோரன், அக்கட்சியின் பொது செயலாளராக இருந்து வருகிறார். சிபு சோரனுக்கு பின் அவர் தான் கட்சியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இரண்டு முறை தேர்வாகியுள்ள துர்கா சோரன் கடந்த 2005ல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.
அவர் கடந்த பல ஆண்டுகளாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவரது சிறுநீரகம் ஒன்று கடந்த 2001ல் அகற்றப்பட்டது. இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்க சென்ற அவர் நேற்று காலை வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால், டாக்டர்கள் அவர் இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டதாக கூறிவிட்டனர். இதனால் சிபு சோரன் பெரிதும் மூட் அவுட்டாகியுள்ளார். சிபு சோரனின் மூன்று மகன்களில் இவர் தான் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.