பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்து சென்னை திரும்பிய கருணாநிதி!
சென்னை: கேட்ட அமைச்சர் பதவிகளை காங்கிரஸ் தர மறுத்ததால், அமைச்சரவையில் சேராமல், வெளியிலிருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவதாக அறிவித்த முதல்வர் கருணாநிதி இன்று காலை அங்கிருந்து சென்னை திரும்பினார்.
இதன்மூலம் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு பதவியேற்கும் நிகழ்ச்சியையும் புறக்கணித்தார்.
இன்று மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் நாளை திமுக செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டுவதாக அறிவித்துள்ளார்.
அமைச்சர் பதவி தொடர்பாக திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த முறையைப் போலவே பல முக்கிய துறைகளை கேட்டது திமுக. ஆனால் காங்கிரஸ் அதை நிராகரித்து விட்டது.
மேலும், திமுகவை விட ஒரே ஒரு சீட் (திமுக 18), கூடுதலாக வைத்துள்ள மமதா பானர்ஜியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டுள்ளது காங்கிரஸ்.
திமுக கேட்ட ரயில்வே உள்ளிட்ட துறைகளை மமதாவுக்கு ஒதுக்க காங்கிரஸ் விரும்பியது. இதனால் திமுக அப்செட் ஆனது.
திமுக தரப்பில் 3 கேபினட், 2 தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர், 3 துணை அமைச்சர் பதவிகள் கேட்கப்பட்டன. ஆனால் இதை காங்கிரஸ் நிராகரித்ததால், அதிலிருந்து சற்று இறங்கி 1 தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் என குறைத்து 7 பதவிகளைக் கேட்டது திமுக.
ஆனால் காங்கிரஸ் இதற்கும் சம்மதிக்கவில்லை. மாறாக, 2 கேபினட், ஒரு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர், 2 துணை அமைச்சர் பதவிகளை மட்டுமே தர முடியும் என திட்டவட்டமாக கூறி விட்டது காங்கிரஸ்.
அத்தோடு நில்லாமல், டி.ஆர்.பாலு, ராசா ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடையாது. ரயில்வே, கப்பல்துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவை கிடையாது. தகவல் தொழில்நுட்பத்துறையை தயாநிதி மாறனுக்கு தருவதாக இருந்தால் மட்டுமே அதை ஒதுக்குவோம் என திட்டவட்டமாக காங்கிரஸ் கூறியதால் அப்செட் ஆனார் கருணாநிதி.
இதையடுத்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சேராமல் வெளியிலிருந்து ஆதரவு தரும் முடிவை அறிவித்தார்.
சென்னை திரும்பினார்..
இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி நேற்றிரவு ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் கருணாநிதியுடன் இரவு 11.30 மணியளவில் தொலைபேசியில் பேசினர். பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்களும் பேசினர். இருப்பினும் அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து திமுக தனது முடிவை மேலும் உறுதியாக்கிக் கொண்டது. காங்கிரஸ் நிலையில் மாற்றம் இல்லாததால் முதல்வர் கருணாநிதி இன்று சென்னை திரும்பினார். டி.ஆர்.பாலு இன்று அதிகாலையே சென்னை வந்து விட்டார்.