பிங்க் ஸ்லிப்-பதைப்பில் 10000 சத்யம் ஊழியர்கள்!
இன்றைய நிலவரப்படி சத்யம் நிறுவனத்தில் 40000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். "சந்தேகமில்லாமல் இவர்களில் 10000 பேர் எங்களுக்கு சுமைதான். ஆனால் வேறு வழியில்லை. வேதனை மிக்க முடிவுதான் என்றாலும் வேறு வழியில்லை... விரைவில் துறை வாரியாகப் பார்த்து பணி நீக்கம் செய்ய வேண்டிய வேலையில் இறங்குவோம்" என்கிறார் டெக்மஹிந்திரா சிஇஓ வினீத் நய்யார்.
ஆனால் சத்யம் நிறுவன இயக்குநர்கள் வாரியத் தலைவர் கிரண் கார்னிக் இதற்கு முற்றிலும் மாறான கருத்தைத் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் இப்போதைக்கு லே ஆஃப் பற்றி யோசிக்கவில்லை. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள அதிகப்படியான செலவைக் குறைப்பது மற்றும் இருக்கிற பணியாளர்களை லாபகரமாகப் பயன்படுத்திக் கொள்வது குறித்த ஒரு பார்முலாவை யோசித்து வருகிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.
எப்படியிருந்தாலும், இரு தரப்பு வார்த்தைகளையுமே நம்பத் தயாராக இல்லை, சத்யம் பணியாளர்கள். எப்போது யாருக்கு பிங்க் ஸ்லிப் தருவார்கள் என்ற பதைப்பில் அவர்களின் நாட்கள் கழிகின்றன.