ஜூன் 1ல் லோக்சபா கூடுகிறது-3ல் சபாநாயகர் தேர்தல்
டெல்லி: 15வது மக்களவையில் முதல் கூட்டம் வரும் ஜூன் 1ம் தேதி கூட்டப்படுகிறது.
ஜூன் 9ம் தேதி வரை நடக்கும் இந்தக் கூட்டத் தொடரில் ஜூன் 3ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடக்கிறது.
இன்று தனது வீட்டில் முதல் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய பிரதமர், நாடாளுமன்றக் கூட்டத்தை எப்போது கூட்டி பெரும்பான்மையை நிரூபிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதில் ஜூன் 1ம் தேதி கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்யப்பட்டது. மேலும் ராஜ்யசபாவை ஜூன் 4ம் தேதி கூட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
4ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உரையாற்றுவார்.
இந்தக் கூட்டத் தொடர் முடிந்த பின், ஜூலையில் மீண்டும் இரு அவைகளைக் கூட்டவும் அந்த மாதம் 31ம் தேதிக்குள் முழு அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டும் முன் மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களுக்குச் சென்று பிரதமர் மன்மோகன் சிங் அஞ்சலி செலுத்தினார்.