பிரபாகரனை உயிருடன் பிடிக்க விரும்பினேன்-ராஜபக்சே
டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிக்கவே விரும்பினேன். ஆனால் முடியவில்லை என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே.
இந்தியா டுடே இதழுக்கு இதுதொடர்பாக அவர் பேட்டி அளித்துள்ளார்.
அதில், பிரபாகரனை உயிருடன் பிடிக்கவே விரும்பினேன். அவரை பிடித்து ராஜீவ் காந்தி கொலை வழக்குக்காக இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கலாம். அதன் பின்னர் இந்தியாவின் தலைவலியாக அவர் மாறியிருப்பார்.
இருப்பினும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற்றது நிம்மதியாக உள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது தீவிரவாதிகளை ஒழித்து விட்டோம். இன்று இலங்கை ஒன்றுபட்ட, முழுமையான நாடாக மாறியுள்ளது.
எனது வெற்றி மற்றவர்களைப் போல சாதாரணமானதல்ல. நான் படைகளை ஒன்றுபடுத்தினேன். அவர்களை சுதந்திரமாக போரிட அனுமதி அளித்தேன். முழு ஆதரவும் அளித்தேன்.
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் இந்தியா முழுமையாக ஈடுபடும். அது எங்களது மிகவும் நெருங்கிய அண்டை நாடு. எனவே அதற்கு அந்தப் பொறுப்பு உள்ளது.
பிற நாடுகளைப் போலவே சீனாவும் எங்கள் நண்பர். அவர்களிடமிருந்து நாங்கள் நிறைய ஆயுதங்களை வாங்கினோம். அதற்காக இந்தியா கவலைப்படத் தேவையில்லை. இந்தியாவுடன் எங்களுக்கு தோழமை மட்டும் இல்லை, நல்ல உறவும் உண்டு என்றார் ராஜபக்சே.