இலங்கையி்ல் பான் கி மூன்-ராஜபக்சே சந்திப்பு
கண்டி: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கை வந்துள்ளார். இன்று கண்டியில் அதிபர் ராஜபக்சேவை அவர் சந்தித்துப் பேசுகிறார். இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் வசிக்கும் சில முகாம்களையும் அவர் பார்வையிடுகிறார்.
சிறப்பு விமானம் மூலம் நேற்று நள்ளிரவுக்கு சற்று முன்னதாக கொழும்பு வந்தடைந்தார் பான் கி மூன். பின்னர் இன்று காலை அவர் கண்டி புறப்பட்டுச் சென்றார். அங்கு அதிபர் ராஜபக்சேவை அவர் சந்தித்துப் பேசுகிறார்.
இந்தப் பேச்சைத் தொடர்ந்து இடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களைப் பார்வையிட அவர் வவுனியா அழைத்துச் செல்லப்படுகிறார். அங்குள்ள சில முகாம்களைப் பார்வையிடுகிறார்.
மேலும், வடக்கில் போர் நடந்த பகுதிகளையும் அவர் ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிடுவார் எனத் தெரிகிறது.
ராஜபக்சேவுடனான சந்திப்பின்போது இடம் பெயர்ந்த மக்களின் முகாம்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறியவுள்ளார் பான். மேலும் போர் பாதித்த பகுதிகளுக்கு செல்ல ஐ.நா. உதவிக் குழுக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரவுள்ளார்.