பாதுகாப்பு வளையம்: தமிழர்கள் இருந்த அடையாளமே இல்லை- விஜய் நம்பியார்
கொழும்பு: பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு மனிதரைக் கூட காண முடியவில்லை. அங்கு மக்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான எந்தவித அடையாளமும் இல்லை. மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டிருப்பது புலனாகிறது என்று போர் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட ஐ.நா. உயர் அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக நம்பியார் கொழும்பில் முகாமிட்டுள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அனுப்பியதன் பேரில் நம்பியார் கொழும்புக்கு வந்துள்ளார்.
இடம் பெயர்ந்தோருக்காக முகாம்களைப் பார்வையிட்ட நம்பியார் போர் நடந்த பகுதிகளையும், பாதுகாப்பு வளையப் பகுதிகளையும் ஹெலிகாப்டரில் இருந்தவாறு பார்வையிட்டார்.
பின்னர் கொழும்பில் செய்தியார்களை அவர் சந்தித்தார். அப்போது பாதுகாப்பு வளையப் பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லை. அங்கு பேரழிவு நடந்திருப்பது புலனாவாதாக தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,
இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதியாக உக்கிர மோதல் இடம்பெற்ற பாதுகாப்பு வலயப் பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளதை நான் காண முடிந்தது.
மோசமாக சேதமடைந்த வீடுகளின் கூரைகளயும், கருகிப் போன வாகனங்களையும், தீயில் கருகிய மரங்களையும் மட்டுமே அங்கு காண முடிகிறது.
நாங்கள் பார்த்தவரை எந்த மனிதரையும் அங்கு காண முடியவில்லை. மனிதர்கள் வாழ்ந்ததற்கான எந்தத் தடயமும் அங்கு இல்லை என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் நாம் மேலும் முன்னேறிச் செல்ல வேண்டும். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையே முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
தமிழ் மக்களின் துயரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக அவர்கள் அரசுத் தலைவர்களுடன் பேச்சுகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய நல்லிணக்கம் அனைத்தையும் உள்ளடக்கியதாக அந்தப் பேச்சு அமைய வேண்டும்.
அப்போதுதான் தமிழ் மக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் நியாயப்பூர்வமான அபிலாஷைகளுக்கு தீர்வு காண முடியும்.
வெற்றி என்பது ஒரு இனத்தவருக்கானதாக மட்டும் இருக்கக் கூடாது. அனைத்து இலங்கை மக்களுக்கும் பொதுவானதாக அது இருக்க வேண்டும்.
மோதலால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது குடும்பத்தவர்கள் பலரை இழந்த தமிழ்ச் சமூகத்தின் துயரங்களை ஏற்றுக் கொள்ளவேண்டும்.
ராணுவ வெற்றியென்பது இந்த நாட்டின் வரலாற்றில் முக்கியமான விஷயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இந்த முக்கியமான தருணத்தில் எடுக்கப்படும் முடிவுகளே நாடு எப்படி முன்னோக்கி நகரலாம் என்பதை தீர்மானிக்கும் என்றார் நம்பியார்.