தமிழக ஆட்சியில் பங்கு வேண்டும்-காங்கிரசார்!
விருதுநகர்: மத்திய காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியில் இத்தனை அமைச்சரவை பதவிகள் வேண்டும், இந்தந்த துறைகள் வேண்டும் என்று கேட்டு திமுக சண்டையிட்டு வரும் நிலையில் தமிழகத்தில் ஆட்சியில் காங்கிரசுக்கும் இடம் தர வேண்டும் என மீண்டும் குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.
தமிழக மக்களுக்கு நல்லது செய்யவும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கவும் தமிழக ஆட்சியில் காங்கிரஸ் கட்சியினர் பங்கு கேட்பதில் தவறு இல்லை என்று விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு இந்தியா முழுவதும் வெற்றி கிடைத்துள்ளது. தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சி மீதும், சோனியா மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர்.
தமிழக மக்களுக்கு நல்லது செய்யவும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கவும் தமிழக ஆட்சியில் காங்கிரஸ் கட்சியினர் பங்கு கேட்பதில் தவறு இல்லை.
கடந்த காலங்களில் இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரசார் கேட்டால் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
எனவே முதல்வர் கருணாநிதி தமது கட்சிக்கு டெல்லி சென்று உரிமையுடன் மந்திரி பதவி பெற முயற்சி செய்வது போல், நாமும் அவரிடம் அமைச்சர் பதவி கேட்டுப் பெற கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி தமிழக காங்கிரசின் நகர, வட்டார, மாவட்ட நிர்வாகிகள் கட்சியின் தேசிய, தமிழக தலைமைக்கு தந்தி அனுப்ப வேண்டும்.
நாம் முயன்றால் தமிழக ஆட்சியில் நிச்சயம் பங்கு கிடைக்கும் என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.