ரூ.2 கோடி ஸ்பிரிட்-சிக்கும் மதுவிலக்கு அதிகாரிகள்!
நெல்லை: ஆந்திரா, கர்நாடகத்திலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வழியாக கேரளாவுக்கு ஸ்பிரிட் கடத்தப்படுவதாகவும், இந்த கடத்தலுக்கு நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் நெல்லை மாநகர மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் சில போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் உடந்தையாக இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் நான்கு மாதங்களுக்கு முன் நடந்த சோதனையின் போது ஒரு மினி லாரியில் கடத்தப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் ஸ்பிரிட் பிடிபட்டது. கடத்தல்காரர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள ஒரு தோட்டத்தில் ஸ்பிரிட் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தி 2 லாரிகளில் கடத்துவதற்காக வைத்திருந்த 18 ஆயிரம் ஸ்பிரிட்டை பறிமுதல் செய்தனர். இதே போல் ஆலங்குளத்தை அடுத்தடுத்து 2 வேன்களில் கடந்த முயன்ற 20 ஆயிரம் லிட்டர் ஸ்பிரிட் பிடிபட்டது.
கடந்த 2 வாரங்களுக்கு முன் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே ஒரு பாழடைந்த பங்காளவில் 210 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 ஆயிரத்து 500லிட்டர் ஸ்பிரிட் பறிமுதல் செய்யப்பட்டது.
கொல்லத்தை சேர்ந்த காவலாளி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திரா மாநிலம் ஐதரபாத், கர்நாடக மாநிலம் பெங்களூர்,ஆகிய பகுதிகளிலிருந்து மாதம தோறும் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள 30 ஆயிரம் லிட்டர் ஸ்பிரிட் தென் மாவட்டங்கள் வழியாக கேரளாவுக்கு கடத்தப்படுவதாக தெரிவித்தனர்.
3 மாவட்டங்களிலும் உள்ள தோட்டங்கள், பாழடைந்த பங்காளாக்களில் ஸ்பிரிட்டை பதுக்கி வைத்து போலீசாரின் கெடுபிடி இல்லாத நேரங்களில் கேரளாவிற்கு கடத்தி சென்று போலி மது தயாரிக்க பயன்படுத்துவதாகவும் கூறினர்.
இதையடுத்து நேற்று முன்தினம் வாசுதேவநல்லூரில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் பதுக்கப்பட்டிருந்த 10 ஆயிரத்து 400 லிட்டர் ஸ்பிரிட்டை போலீசார் கைப்பற்றினர். தென் மாவட்டங்களில் கடந்த 4 மாதங்களில் 2 கோடியோ 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஸ்பிரிட் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கடத்தலுக்கு நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் நெல்லை மாநகர மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் சில போலீஸ் அதிகாரிகளும், போலீசாரும் உடந்தையாக இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.