சுடுகாடாக காட்சி அளிக்கும் போர் பாதித்த பாதுகாப்பு வளையப் பகுதிகள்
கொழும்பு: விடுதலைப் புலிகளுடன் இறுதியாக நடந்த போரின்போது பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்துமே சுடுகாடு போல காட்சி அளிக்கின்றன. முதல் முறையாக சர்வதேச மீடியாக்கள் அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டதால் அதுதொடர்பான புகைப்படங்கள், அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை வெளிக்காட்டும் வகையில் உள்ளன.நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் ஹெலிகாப்டரில் சென்று போர் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார். பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்டு, தற்காலிகமாக மக்கள் குடியமர்த்தப்பட்ட பகுதிகள் அனைத்தும் ராணுவத் தாக்குதலில் சிதிலமாகிக் கிடக்கின்றன.
பான் கி மூனுடன், மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜான் ஹோம்ஸும் உடன் சென்றார். ராணுவ ஹெலிகாப்டரில் சென்ற அவர்களுக்கு சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே ராணுவத்தினர் காட்டினர். ஆனால் அந்த இடங்களே உருக்குலைந்து போய்க் கிடப்பதைப் பார்த்தால், காட்டப்படாத பிற பகுதிகளில் மிகப் பெரிய மனிதப் பேரழிவு நடந்திருக்கும் என்பது தெரிகிறது.
கீழே ஒரு மனித நடமாட்டமும் இல்லை. ராணுவ வீரர்களின் நடமாட்டம் மட்டுமே இருக்கிறது. கூடாரங்கள் அனைத்தும் சேதமடைந்து கிடக்கின்றன. கருகிப் போன வாகனங்கள், மரங்கள் என சுடுகாடு போலக் காட்சியளிக்கிறது அந்தப் பிரதேசம். இதுதொடர்பாக மீடியாக்கள் எடுத்து வெளியிட்டுள்ள படங்கள், மிகப் பெரிய பேரழிவு நடந்திருப்பதை நிரூபிப்பதாக உள்ளன.