சீக்கியர்கள் அமைதி காக்க மன்மோகன் சிங் கோரிக்கை
வியன்னாவில் சீக்கியர்களில் இரு பிரிவினருக்கிடையே நடந்த மோதலில் மதகுரு ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து பஞ்சாபில் பெரும் கலவரம் வெடித்துள்ளது. 2 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளனர். பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சீக்கியர்கள் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள கோரிக்கையில், வியன்னாவில் ஏற்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து பஞ்சாபில் வன்முறை வெடித்துள்ளது வேதனையைத் தருகிறது.
எதுவாக இருந்தாலும், அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டியது முக்கியமானது.
எனவே பஞ்சாப் மக்களின் அனைத்துப் பிரிவினரும் வன்முறையை கைவிட்டு அமைதியை நிலை நாட்ட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டியது அவசியம். பாதுகாப்புப் படையினர் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மக்கள் உதவி புரிய வேண்டும்.
சீக்கிய மதம் சகிப்புத்தன்மை, நல்லிணக்கத்தையே போதிக்கிறது. சீக்கிய மதத்தின் மத குருக்கள் அனைவருமே சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தையே போதிக்கிறார்கள்.
எனவே மத குருக்களின் போதனையை மக்கள் ஏற்று அதன்படி செயல்பட்டு, அமைதியையும், சட்டம் ஒழுங்கையும் பராமரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.