ராஜபக்சே, பொன்சேகா, எனது உயிர்களுக்கு ஆபத்து நீடிக்கிறது - கோதபாய ராஜபக்சே
கொழும்பு: விடுதலைப் புலிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டாலும் கூட அதிபர் ராஜபக்சே, நான் மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோரின் உயிர்களுக்கு இன்னும் ஆபத்து உள்ளது என்று ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபாய ராஜபக்சே கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான இடம் இல்லை. விடுதலைப் புலிகளின் எல்லா தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டனர். அவர்கள் முழுமையாக முறியடிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் கடந்த 30 வருடங்களாக படையினரிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் அனைத்தையும் படையினர் கைப்பற்றியுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குழுக்களுக்கு எதிராக சர்வதேச சமுதாயம் செயல்ட வேண்டும்.
சில மனித உரிமை அமைப்புக்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதை விடுத்து விடுதலைப் புலிகளை காப்பாற்ற முயன்றன. ஆனால், அவர்களை அரசு அடையாளம் கண்டு செயல்பட்டது.
அதிபர் ராஜபக்சே, நான் மற்றும் முப்படைத் தளபதிகள் ஆகியோரின் உயிர்களுக்கான ஆபத்துக்கள் இன்னும் நீங்கவில்லை.
போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து என்னை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.
இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் தடுக்கப்படவில்லை. 5 ஆயிரம் விடுதலைப் புலிகள் சரணடைந்துள்ளனர். அவர்களில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார் அவர்.