தேர்தல் முடிந்தது, மக்கள் துயரம் தொடர்கிறது - வரதராஜன் !
கோவை: தேர்தல் முடிந்தது, ஆனால் மக்கள் துயரம் தொடர்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் கூறினார்.
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை வெற்றி பெறச் செய்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் குஜராத்தி சமாஜத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் என். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் பேசியதாவது,
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பணபலமும், அதிகார பலமும் நமது அணியின் வெற்றியைத் தட்டிப் பறித்துள்ளது.
மதுரையில் மட்டும் 10 லட்சம் வாக்காளர்களுக்கு ரூ.150 கோடி பணத்தை திமுக வாரி இறைத்துள்ளது.
சிவகங்கையில் தோற்று விட்டோம் என்று தெரிந்து ப.சிதம்பரம் வெளியேறிய பின்னர் டில்லியில் இருந்து வந்த தலையீட்டால் சில ஆயிரம் வாக்குகள் மாற்றப்பட்டு சிதம்பரம் வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது.
திருச்சியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னரும் சில மணி நேரங்கள் சான்றிதழ் தராமல் இழுத்தடித்தனர்.
இத்தகைய மோசடிகள் அதிகரித்திருப்பது தேர்தல் முறையில் மாற்றம் தேவை என்பதை உணர்த்துகிறது.
இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி ஜன நாயக உணர்வில் பற்றுள்ள மக்கள் தமிழகத்தில் அதிமுக அணிக்கு 12 இடங்களை அளித்துள்ளனர்.
ஜனநாயகத்திற்கு எப்போதெல்லாம் ஆபத்து ஏற்படுகிறதோ, அப்போது எல்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் முறையில் விகிதாச்சாரப் பிரதி நிதித்துவத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றோம்.
நமது முன்னோர்கள் தியாகம் செய்து பெற்ற சுதந்திரத்தை தனிநபர்கள் கொள்ளையடிக்க அனுமதிக்கக் கூடாது.
தேர்தல் தான் முடிந்ததே தவிர, மக்கள் படும் துன்ப துயரங்கள் தொடர்கிறது. விலைவாசி குறையவில்லை. விவசாயிகள் இன்னல் தீரவில்லை.
மத்தியில் ஆண்ட ஐ.மு.கூட் டணி அரசு அமைத்த பல கமிட்டிகளின் அறிக்கைகளைக் கூட அமல்படுத்தவில்லை.
குறிப்பாக விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி விவசாய விளைபொருட்களுக்கு 4 சதவீத வட்டி, உள்நாட்டு உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்க பரிந்துரைத்தது. இதைக்கூட மத்திய அரசு இன்றுவரை அமலாக்க வில்லை.
தமிழகத்தில் கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு எட்டாத உயரத்தில் உள்ளது. அதே சமயம் 41 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்து அங்கு ஏகபோக பண முதலைகளுக்கு தடையற்ற மின்சாரம், அபரிமிதமான வரிச்சலுகைகள் என திமுக அரசு வாரி வழங்குகிறது. இது குறித்து வெள்ளையறிக்கை வெளியிட கலைஞர் மறுத்து வருகின்றார் என்று பேசினார்.