For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வியன்னாவில் மதகுரு கொலை- பஞ்சாப்பில் பயங்கர வன்முறை - 2 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

Punjab Violence
சண்டிகர்/வியன்னா: ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இரு சீக்கிய பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒரு சீக்கிய மதகுரு சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. வன்முறைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ராணுவம் விரைந்துள்ளது.

வியன்னாவில் உள்ள குருத்வாரா ஒன்றில் நேற்று இந்த மோதல் மூண்டது. சீக்கியர்களுக்கும், தேரா சச்சா பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலில், இரு தரப்பினரும் கத்திகள், துப்பாக்கிகளுடன் கடுமையாக மோதிக் கொண்டனர்.

இதில் 56 வயதாகும் சந்த் ராம் நந்த் என்ற மதகுரு கொல்லப்பட்டார். 9 பேர் படுகாயமடைந்தனர். 30 பேர் லேசான காயம் அடைந்தனர்.

கொல்லப்பட்ட சந்த் ராம் நந்த் மற்றும் குரு சந்த் நிரஞ்சன் தாஸ் என்ற மதகுருவும் இணைந்து குருத்வாராவில் ஆன்மீக உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென 6 பேர் உள்ளே நுழைந்து கத்திகள், துப்பாக்கிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த வன்முறை மோதல் தொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாபில் வன்முறை..

வியன்னாவில் நடந்த தாக்குதல் பஞ்சாபில் எதிரொலித்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் வன்முறை மற்றும் கலவரம் மூண்டுள்ளது.

ஜலந்தர், பாட்டியாலா உள்ளிட்ட பல நகரங்களில் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. ஜலந்தரில் பஸ்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. போலீஸ் வேன்களும் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. அங்கு துணை ராணுவப்படை விரைந்துள்ளது. ராணுவமும் விரைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜலந்தரிலிருந்து, பக்வாராவுக்கும், சண்டிகருக்குமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நகோதர் நகரிலும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி போராட்டம், சாலை மறியல் ஆகியவற்றில் இறங்கினர். கல்வீச்சும் நடந்தது. பாட்டியாலாவும் இதேபோன்ற போராட்டங்களை சந்தித்துள்ளது.

2 பேர் பலி...

ஜலந்தரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லம்ப்ரா கிராமத்தில், ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு பேர் காயமடைந்தனர்.

அதேபோல ஜலந்தர் கன்டோன்மென்ட் பகுதியில், போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்.

ரயிலுக்கு தீவைப்பு...

பக்வாரா பகுதி வழியாக சென்ற கன்னியாகுமரி - ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயிலை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி தீவைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ரயிலின் 3 பெட்டிகள் எரிந்து போய் விட்டன.

வன்முறை அதிகரித்து வருவதால் லூதியானா, ஜலந்தர், பக்வாரா, ஹோஷியார்பூர் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பக்வாராவில் நிலைமையைக் கட்டுக்குள் வைப்பதற்காக அங்கு துணை ராணுவப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

அம்பாலா அருகே சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சண்டிகரில் இதுவரை பெரிய அளவில் பதட்டம் இல்லை. இருப்பினும் அங்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராணுவம்..

ஆறு கம்பெனி துணை ராணுவப் படையினரும், எட்டு கம்பெனி ராணுவமும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி - லாகூர் பஸ் நிறுத்தம்...

டெல்லி, லாகூர் இடையிலான பஸ் போக்குவரத்து லூதியானாவுடன் நிறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X