பஞ்சாபில் தொடர்ந்து ஊரடங்கு-மோதலுக்கு காரணம் என்ன?
இதன் காரணமாக வட மாநிலங்கள், தென் மாநிலங்களுக்கு இடையிலான ரயில்கள் பஞ்சாபில் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இது தவிர பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன.
ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இரு சீக்கிய பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் சீக்கிய மத குரு சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பஞ்சாப் மாநிலத்தில் இன்றும் மூன்றாவது நாளாக வன்முறை தொடர்ந்தது.
இன்று காலை முக்ஸ்தார் மாவட்டத்தில் தேரா சச்சா பிரிவைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், அங்கு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜலந்தரில் நேற்று முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. பின்னர் ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
இந் நிலையில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வர பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டினார். இக் கூட்டத்தில் அனைவரும் அமைதியைப் பேண வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் சந்திப்பு...
இதற்கிடையே வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவை இன்று பாஜக மற்றும் சிரோன்மணி அகாலி தள கட்சித் தலைவர்கள் சந்தித்து வியன்னாவில் நடந்த சம்பவம் குறித்து உண்மை நிலைமையை அறிய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.
கடும நடவடிக்கை-ஆஸ்திரியா:
இதையடுத்து ஆஸ்திரிய வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் ஸ்பின்டிலெஜருடன் எஸ்.எம். கிருஷ்ணா தொலைபேசியில் பேசினார்.
அப்போது குருத்வாராவில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மைக்கேல் உறுதியளித்தார். மேலும் தாக்குதலில் பலியான சீக்கிய மத குருவின் உடலை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதற்க்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கிருஷ்ணாவிடம் அவர் தெரிவித்தார்.
மோதலுக்கு காரணம் என்ன?:
சீக்கிய மத குருக்கள் 1469ம் ஆண்டு முதல் 1708ம் ஆண்டு வரை பாடிய வழிபாட்டுப் பாடல்கள், போதனைகள் ஆகியவை குரு கிராந்த் சாகிப் என்ற புனித நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புனித நூலை சீக்கியர்கள் வணங்கி வருகின்றனர்.
சீக்கியர்களில் ஜாட், தேரா சச்சா என்ற இரு முக்கிய பிரிவினர் உள்ளனர். இதில் தேரா சச்சா சீக்கியர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பஞ்சாபில் சுமார் 50 லட்சம் தலித் சீக்கியர்கள் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 29 சதவீதம் உள்ளனர். ஆனால், பஞ்சாப் வளமாக இருந்தாலும் இவர்கள் அடித்தட்டு மக்களாகவே உள்ளனர். இவர்களில் 2.5 சதவீதத்தினர் தான் நிலத்துக்கு சொந்தக்கார்கள். மற்றவர்கள் பெரும்பாலும் விவசாயக் கூலிகளே.
இந்த சமூக-பொருளாதார ஏற்றத் தாழ்வு காரணமாக இரு பிரிவு சீ்க்கியர்களிடையே நெடுங் காலமாகவே மோதல் இருந்து வருகிறது.
70 ஆண்டுகளுக்கு முன் தேரா பிரிவு உண்டானது. இப்போது இதன் தலைவராக உள்ள நிரஞ்சன்தாஸ் வியன்னா சென்றிருந்தபோது அவரது காலில் விழுந்து அவரது பிரிவினர் வணங்கினர்.
இதற்கு உயர் ஜாதியான ஜாட் சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புனித நூலான குரு கிராந்த் சாகிப்பைத் தவிர எதையும் வணங்கக் கூடாது, யார் காலிலும் விழக்கூடாது என்று தகராறு செய்துள்ளனர்.
இதனால் தான் மோதல் நடந்துள்ளது.