நீரில்லை-கழிப்பிடமில்லை: கொடுமையான சூழலில் தவிக்கும் தமிழர்கள்
இலங்கை வடக்கு பகுதியில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் 29 முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாம்களில் போதிய குடிநீரோ, கழிப்பிட வசதிகளோ, தண்ணீர் வசதியோ இல்லாமல் லட்சக்கணக்கான தமிழர்கள் மிகக் கொடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சிறிய குட்டைகளில் தேங்கியுள்ள நீரில் தான் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். மிக அசுத்தமான, சொல்ல முடியாத கஷ்டங்களுடன் மகா மட்டமான சூழ்நிலையில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்தவர்களுக்கோ உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கோ மருந்து கூட தரப்படவில்லை.
இவர்களுக்கு போதிய குடிநீரோ, உணவோ கூட வழங்கப்படவில்லை. இதை நேரில் பார்த்து அதிர்ந்து போன பான் கி மூன், இவர்களுக்கு உதவ ஐ.நா. மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால், தொண்டு நிறுவனத்தினர் உள்ளே வந்தால் அங்கு இலங்கை ராணுவம் நடத்திய கொடுமைகள் உலகத்தின் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால் அதை இலங்கை அதிபர் ராஜபக்சே ஏற்க மறுத்துள்ளார்.
முகாம்களில் போதிய வசதிகள் உள்ளதாகக் கூறியுள்ள அவர் உதவிகளை அரசிடம் வழங்கலாம் என்றும், அதை அரசே தமிழர்களுக்கு வழங்கும் என்றும் கூறி வருகிறார்.
சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள இந்தத் தமிழர்கள் தப்பிச் செல்ல முடியாதபடி முகாம்களைச் சுற்றிலும் இரும்பு தடைகள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேர துப்பாக்கிய ஏந்திய ராணுவத்தினரின் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.