ஜூலை 6 முதல் எம்பிபிஎஸ்-10 முதல் பிஇ கவுன்சிலிங்
இது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறுகையில்,
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 30ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 31ம் தேதி மாலைக்குள் சமர்பிக்க வேண்டும்.
ஜூன் 20ம் தேதி பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.
ஜூலை 5 முதல் கவுன்சிலிங்...
இதைத் தொடர்ந்து பொறியியல் படிப்பில் சேர விரும்பும் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 5ம் தேதி நடக்கும்.
தொழிற்கல்வி படித்து என்ஜினீயரிங் சேர விரும்புபவர்களுக்கு 6ம் தேதி முதல் 8ம் தேதி வரையும், தேவைப்பட்டால் தொடர்ந்தும் கவுன்சிலிங் நடைபெறும்.
உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு 9ம் தேதி கவுன்சிலிங் நடக்கும்.
பொது பிரிவினருக்கு ஜூலை 10 முதல்...
பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 10ம் தேதி முதல் ஆகஸட் 16ம் தேதி வரை நடக்கும். இது கடந்த ஆண்டை விட 15 நாட்கள் குறைவாகும்.
இந்த ஆண்டு கல்வி கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் கடந்த ஆண்டு கட்டணமே வசூலிக்கப்படும், கட்டணம் உயராது.
இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு கல்லூரிகளில் 2,160 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும் புதிதாக 5 கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. இதன் மூலம் கூடுதலாக 1,200 மாணவர்களுக்கு சீட்கள் கிடைக்கும்.
கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 1,34,481 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு 1,37,841 இடங்கள் உள்ளன.
ஜூலை 6ல் மருத்துவ கவுன்சிலிங்...
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் ஜூலை 6ம் தேதி தொடங்கும் என்றார்.