சென்னை விமான நிலையத்தில் தாவூத் கூட்டாளி கைது
செனனை: துபாய்க்கு தப்ப முயன்ற தாவூத் இப்ராகிமின் கூட்டாளி சென்னை விமான நிலையத்தில் மங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள காபு என்ற பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில். துபாயில் பணியாற்றி வந்த இவருக்கும் தாவூத் இப்ராகிமின் கூட்டாளி ரஷீத் மல்பாரியுடன் நட்பு ஏற்பட்டது. இதையடுதது தாவூதின் வலது கரமான சோடா ஷகீலும் இவருக்கு அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து மல்பாரி, இஸ்மாயில் மூலம் கர்நாடகத்தில் சோடா ஷகீல் தனது தீவிரவாத செயல்களை அரங்கேற்றி வந்தார்.
இந் நிலையில் மல்பாரியை மங்களூர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இஸ்மாயில் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந் நிலையில் இஸ்மாயில் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல முயல்வதாக கர்நாடக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மங்களூரில் இருந்து வந்த தனிப் படை போலீசார் சென்னைக்கு வந்து இஸ்மாயிலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
கைதான இஸ்மாயில் மங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைத்தனர்.