டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்-சரத்குமார்!
சேலம்: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், இல்லையென்றால் கள் விற்க அனுமதி வழங்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டுமென விவசாயிகளும் பனை, தென்னை தொழிலாளர்களும் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த 2006ம் ஆண்டு தேர்தலின் போது, இக் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
ஆனால், தற்போது நடந்த மக்களவை தேர்தலிலும் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று மீண்டும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
கள் விற்பது குறித்து, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம் அதிகாரிகள் ஆகியோரிடம் தமிழக அரசு விரைவில் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
அதற்கு முன்பாக மக்களுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்படுத்தும் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். இல்லை என்றால் கள் விற்பனையையும் அனுமதிக்க வேண்டும்.
எனவே, கள் விற்பனையை தமிழகத்தில் அனுமதிக்க வலியுறுத்தி, சேலத்தில் ஜூலை 5ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.