பார்தி-எம்டிஎன்: 23 பில்லியன் டாலர் 'மெகா' இணைப்பு!
மும்பை: தென்னாப்ரிக்காவின் எம்டிஎன் தொலைபேசி நிறுவனதுடனான இணைப்பு முயற்சியில் மும்முரமாக இறங்கிவிட்டது இந்தியாவின் பார்தி ஏர்டெல்.
பாரதியும் எம்டிஎன்னும் 23 முதல் 26 பில்லியன் டாலர் வரை தங்களுக்குள் முதலீடு செய்ய உள்ளன.
இரு நிறுவனங்களும் இணைப்பு குறித்து பேசுவது இது முதல் முறையல்ல. இந்த புதிய அமைப்பின் தலைமைப் பொறுப்பு மற்றும் கட்டுப்பாடு யாரிடம் இருக்கும் என்பதில் இரு நிறுவனங்களுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்டதால், முன்பு நடந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.
இப்போதைய பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் 200 மில்லியன் மொபைல் சந்தாதாரர்களைக் கொண்ட புதிய தொலைத் தொடர்பு நிறுவனம் உருவாக்கப்படும். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள 24 நாடுகளில் இந்த சந்தாரர்கள் பரந்து விரிந்திருப்பார்கள்.
இந்த புதிய நிறுவனத்தின் கட்டுப்பாடு பெரும்பாலும் பார்தி ஏர்டெல்லிடம் இருக்கும். அதே நேரம் பார்தி நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் எம்டிஎன் பிரதிநிதிகள் இடம்பெறுவர். கணக்குகள் அனைத்தையும் எம்டிஎன் பார்வையிடும் அதிகாரம் பெறுகிறது.
தனிப்பட்ட முறையில் எம்டிஎன் நிறுவனம் 27 பில்லியன் டாலர் மதிப்புள்ளது. பார்தி ஏர்டெல் 34 பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனம். இந்த இரண்டும் இணைந்து உருவாக்கும் புதிய நிறுவனம் உலகின் டாப் 10 மொபைல் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
இந்தியாவின் எல்லைக்கு வெளியே நடக்கும் மிகப் பெரிய நிறுவன இணைப்பு இதுவே. டாடாவின் கோரஸ் ஸ்டீல் இணைப்பை விட கிட்டத்தட்ட இருமடங்கு பெரிய டீல் இது என்கிறார்கள் தொழில் துறை வல்லுநர்கள்.
இந்த இணைப்பு மூலம், எம்டிஎன்னின் 49 சதவிகித பங்குகளை பார்தி நிறுவனம் பெறும். அதேபோல பார்தியின் 36 சதவிகித பங்குகளை எம்டிஎன் பெறும்.
"இது பரஸ்பர லாபம் தரும் ஒரு ஒப்பந்தம். மார்க்கெட் மதிப்பு மற்றும் அளவில் எங்கள் நிறுவனங்களின் பங்கை அதிகரிக்க இது ஒரு நல்ல வழி," என்கிறார் பார்தி நிறுவன சேர்மன் சுனில் பார்தி மித்தல்.
இணைப்பு குறித்த விரிவான தகவல்களை ஜூலை 31க்குள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எம்டிஎன் நிறுவனம் ஏற்கெனவே இணைப்புக்காக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் பேசி வந்தது. ஆனால் அனில் - முகேஷ் அம்பானிகள் சண்டையால் அந்த முயற்சி கைகூடவே இல்லை.