ரிலையன்ஸ் பவரின் 'ப்ளாக் டீல்'!
மும்பை: ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் 20 கோடி பங்குகளை குறிப்பிட்ட சில நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றும் முயற்சியில் அனில் திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்காக கடந்த சில தினங்களாக நிறுவனத்தின் இயக்குநர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், நிறுவனத்தின் புரமோட்டர்கள் வசமுள்ள 20 கோடி பங்குகளை தலா ரூ.150 விலையில் கைமாற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகிறது.
ரூ.1500 கோடி முதல் 3000 கோடி மதிப்புள்ள இந்த பங்குப் பரிவர்த்தனையை பிளாக் டீல் (Block Deal) அல்லது பேரளவு பரிமாற்றம் என்று பங்குச் சந்தையில் வர்ணிக்கிறார்கள்.
அது என்ன பேரளவு பரிமாற்றம்?
சில நிறுவனங்கள் தங்கள் ப்ரமோட்டர்கள் வசமுள்ள பங்குகளை மொத்தமாக வெளிச் சந்தையில் வாங்க அல்லது தங்களைச் சார்ந்த வேறு நிறுவனங்களுக்கு கைமாற்ற நினைக்கும். உதாரணத்துக்கு ஒரு நிறுவனத்தின் 1 கோடி பங்குகளை வெளிச்சந்தையில் வாங்க முயன்றால், திடீரென பல சந்தேகங்கள் எழும். அதன் விலையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு பங்குச் சந்தை ஏற்றத் தாழ்வு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க, தனி முறையை செபி வைத்துள்ளது.
இதில் பங்குகளை விற்பவர்கள், வாங்குபவர்கள் தங்களுக்கென தரப்பட்ட கோட் எண்களை தெரிவித்து, மொத்தமாக பங்குகளை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம்.
இந்த முறையில்தான் ரிலையன்ஸ் பவர் பங்குகள் கைமாற உள்ளன.