ஜூலை முதல் வாரத்தில் மத்திய பட்ஜெட்-பிரணாப்
டெல்லி: வரும் ஜூலை முதல் வாரத்தில் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி:
தற்போது நிலவி வரும் பொருளாதார மந்தத்தில் நாட்டை முன்னேற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் நல திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
எங்களது தேர்தல் அறிக்கையில் தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஒரு நாள் சம்பளம் 100 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், உணவு அளிப்பது உறுதி செய்யப்படும் என்றும் அந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தன. அவற்றை உறுதி செய்யும் வகையில் பட்ஜெட் இருக்கும்.
சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த கடந்த டிசம்பர் மாதம் முதல் 3 தடவை நிதி உதவி வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் மேலும் இதுபோன்ற நிதி உதவிகள் தேவைப்படுகிறது. அதற்கு என்ன தேவையோ அவை வழங்க பட்ஜெட்டில் வழிவகை இருக்கும்.
ஜவுளித்தொழில், தோல் தொழில், வைரம் மற்றும் நகைத் தொழில் போன்றவை சர்வதேச நிதி நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டன. அவற்றின் முன்னேற்றம் குறித்த வழிவகைகள் பட்ஜெட்டில் இடம்பெறும். ஜூலை முதல் வாரம் தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என்றார் பிரணாப்.