சென்னை: ஐடி நிறுவனங்கள் இடத்தேவை 25% குறைந்தது!
இதுகுறித்து பிரபல ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'ஜோன்ஸ் லேங் லசால்லே மேகராஜி'ன் ரியல் எஸ்டேட் ஆய்வுப் பிரிவு அளித்துள்ள அறிக்கை:
சென்னையில் ஐடி துறைப் பணிகள் உள்ளிட்ட வணிக தேவைகளுக்காக 30 மிலிலியன் சதுர அடி இடம் காலியாக உள்ளது. அதாவது 15 முதல் 20 சதவிகித இடப் பரப்பு காலியாக உள்ளன. இந்த ஆண்டு அது இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
ஐடி துறையில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் இதற்குக் காரணம். தேவையை விட கிட்டத்தட்ட இரு மடங்கு இடம் காலியாக உள்ளது சென்னையில். குறிப்பாக பழைய மகாபலிபுரம் சாலையில் இந்த ஆண்டு வணிக இடங்களுக்கான வாடகை குறைந்துள்ளதோடு, முன்பைவிட கூடுதலாக காலியிடங்கள் உள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
குறிப்பாக ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அதிகரித்துள்ளதால், பழைய மாமல்லபுரம் சாலையில் ஐடி நிறுவனங்கள் வருவதும் குறைந்துள்ளதாம்.
அதிகரிக்கும் காலியிடத்தின் அளவு, ஐடி துறை வீழ்ச்சி போன்றவற்றால் இப்போது, குறிப்பிட்ட காலத்துக்கு வாடகையின்றி நிறுவனத்தை நடத்திக் கொள்ளும் சலுகையையும் இடத்தின் உரிமையாளர்கள் நிறுவனங்களுக்கு தரத் துவங்கியுள்ளனர். இருக்கிற வாடிக்கையாளரை தக்க வைத்துக் கொள்ளும் ஒரு முயற்சி இது என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள்.
சென்னைதான் என்றில்லை, இந்திய அளவிலும் இதே நிலை நிலவுவதாக தெரிவித்துள்ளது ஆய்வு முடிவு.