இன்று அதிமுக செயற்குழு-தோல்வி குறித்து ஆய்வு
இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கும் இக் கூட்டத்தி்ல் உள்கட்சி தேர்தலை நடத்துவது உள்ளிட்ட சில அறிவிப்புகளை ஜெயலலிதா வெளியிடலாம் என்று தெரிகிறது.
அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை வகிக்க அனைத்து மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் இக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் அடுத்து அமையப் போகும் ஆட்சியை நிர்ணயிக்கப் போகிறவர் ஜெயலலிதா தான் என்று வட இந்திய மீடியாக்களும் சில தமிழக மீடியாக்களும் ஊதிவிட்ட நிலையில் மிக நம்பிக்கையோடு தேர்தலை சந்தித்தது அதிமுக.
இதனால் மூன்றாவது அணியிலும் வெளியிலுமாக இருந்த ஜெயலலிதா வளைக்க குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மூலம் வலை வீசியது பாஜக.
தேர்தல் அன்று நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, முடிவுகள் வெளியானதும் டெல்லி சென்று ஆக வேண்டியதைப் பார்ப்பேன் என்றார் பெருத்த நம்பிக்கையுடன்.
ஆனால், 9 இடங்களில் மட்டுமே அதிமுக வென்றது. இவரை நம்பி கூட்டணி சேர்ந்த பாமக 7 தொகுதிகளிலும் 7 டன் மண்ணைக் கவ்வியது.
மதிமுகவுக்கும் இரு இடதுசாரிகளுக்கும் தலா ஒரு இடமே தப்பியது.
இதனால் அடுத்த 5 வருடத்துக்கு தேசிய அளவில் அதிமுக பக்கம் திரும்பிப் பார்க்கக் கூட யாருமில்லாத நிலையில் மீண்டும் மாநில அரசியலில் தனது தீவிர கவனத்தை திருப்பவுள்ளார் ஜெயலலிதா.
தேர்தல் தோல்விக்கு மின்னணு எந்திரத்தின் மீது ஜெயலலிதா பழியைப் போட்டாலும் கூட, இன்றைய கூட்டத்தில் தோல்விக்கான உண்மையான காரணம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் ஜெயலலிதா ஏற்கனவே தோற்ற பர்கூர் உட்பட நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு கட்சியை தயார் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு முன் உட்கட்சித் தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.