600 போலீசார் இடமாற்றம்-காவல்துறை மறுப்பு
சென்னை: சென்னையில் 600 போலீசாருக்கு இடமாற்றம் வழங்கப்பட இருப்பதாக வெளியான பத்திரிகை செய்திகளை மாநகர போலீஸ் மறுத்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகர போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மே 26ம் தேதி சில பத்திரிகைகள் காவல்துறையில் கருப்பு ஆடுகள் என்றும், இரண்டு பேர் பணி நீக்கம் என்றும் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும், குற்றவாளிகளடன் தொடர்பு வைத்திருந்த 600 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தன.
இவற்றில் இரண்டு தலைமை காவலர்கள் இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பது மட்டுமே உண்மையானது. அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
600 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க யாரும் எந்த பரிசீலனையும் மேற்கொள்ளவில்லை. இடமாற்றம் என்பது நிர்வாக காரணங்களுக்காக நடத்தப்படும் வழக்கமான ஒன்று தான். அதை ஒரு தண்டனை என கருதப்பட முடியாது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.