அழகிரி- தயாநிதி- ராஜா- வாசன்- பழனிமாணிக்கம் நெப்போலியன்-ஜெகத்-காந்திசெல்வன் பதவியேற்பு
அதே போல பழனிமாணிக்கம், நெப்போலியன், ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன் ஆகியோர் மத்திய இணையமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
தயாநிதி, ராஜா, வாசன், மு.க.அழகிரி ஆகியோரின் குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அழகிரியின் தாயார் தயாளு அம்மாள், அமைச்சர் ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்றனர்.
அழகிரி உள்பட தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து அமைச்சர்களுமே ஆங்கிலத்திலேயே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
ஸ்டாலினுக்கு ராகுல் காந்தியின் அருகி்ல் இருக்கை தரப்பட்டிருந்தது.
வழக்கமாக பேண்ட்-சர்ட்டில் இருக்கும் தயாநிதி மாறன் வேஷ்டி-சட்டையில் வந்து பதவியேற்றுக் கொண்டார்.
நாராயணசாமியின் அவசரம்...
புதுச்சேரியைச் சேர்ந்த நாராயாணசாமியும் இணையமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவரது பெயரை ஜனாதிபதி சொல்வதற்கு முன்னதாகவே வேகவேகமாக பதவிப் பிரமாணத்தை படிக்க ஆரம்பித்துவி்ட்டார் நாராயணசாமி.
இதைக் கண்டு ஜனாதிபதி, பிரதமர், சோனியா மற்றும் நாராயணசாமியின் குடும்பத்தினர் உள்பட அரங்கில் கூடியிருந்த அனைவரும் பலமாக சிரித்துவிட்டனர்.
இதையடுத்து மீண்டும் அவர் பெயரை ஜனாதிபதி கூறவே, மீண்டும் பதவிப் பிரமாணத்தை ஆரம்பத்தில் இருந்து படித்தார் நாராயணசாமி.
மொத்தம் 59 பேர் பதவியேற்பு:
மொத்தத்தி்ல் 14 கேபினட் அமைச்சர்கள், 7 தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள், 38 இணையமைச்சர்கள் என 59 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களது விவரம்:
14 கேபினட் அமைச்சர்கள்:
முன்னாள் முதல்வர்களான விலாஸ் ராவ் தேஷ்முக் (மகாராஷ்டிரம்), வீர்பத்ர சிங் (இமாச்சல் பிரதேசம்), பரூக் அப்துல்லா (காஷ்மீர்), திமுகவைச் சேர்ந்த தயாநிதி மாறன், அழகிரி, ராஜா, காங்கிரசைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, குமாரி ஷெல்ஜா, சுபோத்காந்த் சகாய், எம்எஸ் கில், பவன்குமார் பன்சால், முகுல் வாஸ்னிக், காந்தி லால் பூரியா ஆகியோர்.
7 தனிப் பொறுப்பு கொண்ட இணையமைச்சர்கள்:
பவாரி்ன் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல், காங்கிரசைச் சேர்ந்த பிரிதிவிராஜ் சவான், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சல்மான் குர்ஷித், ஜெய்ராம் ரமேஷ், கிருஷ்ணா திராத், தின்சா படேல் ஆகியோர்.
38 இணையமைச்சர்கள்:
இணையமைச்சர்களாக திமுகவைச் சேர்ந்த பழனிமாணிக்கம், ஜெகத்ரட்சகன், காந்தி செல்வன், நடிகர் நெப்போலியன் மற்றும் இ.அகமத், நாராயணசாமி, ஸ்ரீகாந்த் ஜேனா, முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், பனபாக லட்சுமி, அஜய் மகான், முனியப்பா, நமோ நாராயணன் மீனா, ஜோதி ஆதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத், சச்சின் பைலட், சாய் பிரசாத்,
குருதாஸ் காமத், மகதேவ் கண்டேலா, ஹரிஷ் ராவத், தாமஸ், சுகதா ரே, தினேஷ் திரிவேதி, சிசிர் அதிகாரி, சுல்தான் அகமத், முகுல் ராய், மோகன் ஜாதுவா, பிரநீத் கெளர், சசி தரூர், புரந்தேஸ்வரி, பல்லம் ராஜூ, பாரத் சிங் சோலன்கி,
துஷார்பாய் செளத்ரி, அருண் யாதவ், பிரதீக் பிரகாஷ்பாபு படேல், ஆர்பிஎன் சிங், வின்சென்ட் பாலா, பிரதீப் ஜெயின், அகதா சங்மா ஆகியோர் பதவியேற்றனர்.