பாலு 'அப்செட்'-விழாவி்ல் கனிமொழி 'ஆப்சென்ட்'!
டெல்லி: தனக்கு அமைச்சர் பதவி மட்டுமல்லாமல், லோக்சபா துணை சபாநாயகர் பதவியையும் தர காங்கிரஸ் மறுத்து விட்டதால் கடும் அப்செட் ஆகியுள்ளார் டி.ஆர்.பாலு.
அதேபோல மத்திய அமைச்சராவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கனிமொழியும், இன்று டெல்லியில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.
டெல்லியில் முதல்வர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் தலைகளாக காணப்படுகிறது. முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், மு.க.அழகிரியின் மனைவி காந்தி, மகன், மகள்கள், தயாநிதி மாறனின் மனைவி, குழந்தைகள், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் என முதல்வரின் குடும்பமயமாக காணப்பட்டது ராஷ்டிரபதி பவன்.
ஆனால் இவர்களில் கனிமொழி மட்டும் மிஸ்ஸிங். தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டவர் கனிமொழி. ஆனால் கடைசி நேரத்தில் அவர் பதவிப் பட்டியலில் இல்லை. இந்த நிலையில் இன்று நடந்த பதவியேற்பு விழாவின்போது கனிமொழியை அங்கு காண முடியவில்லை.
கனிமொழி டெல்லியில்தான் இருக்கிறார். இருப்பினும் அவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அவர் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
கடும் அதிருப்தியில் டி.ஆர்.பாலு...
அதேபோல அமைச்சர் பதவி மறுக்கப்பட்ட அதிருப்தியில் டி.ஆர்.பாலு புதுக்கோட்டை அருகே உள்ள தனது கல்லூரிக்குச் சொந்தமான விருந்தினர் இல்லத்தில் தங்கியுள்ளாராம்.
சீனியரான தன்னை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக கருதுகிறாராம் பாலு. திமுகவும் தன்னை கைவிட்டு விட்டதாக அவர் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.