6வது ஊதியக் குழு பரிந்துரைகள் குறித்த அறிக்கை கருணாநிதியிடம் தாக்கல்
சென்னை: 6வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்து பரிசீலிக்க அமைக்கப்பட்ட தமிழக அரசின் குழு தனது அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் அளித்துள்ளது. இதையடுத்து விரைவில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் எனத் தெரிகிறது.
கடந்த 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் 6-வது ஊதியக் கமிஷனை மத்திய அரசு அமைத்தது. இந்த கமிஷன், கடந்த ஆண்டில் அறிக்கையை தாக்கல் செய்தது.
அதில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு சராசரியாக 40 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படவேண்டும் என்பது உள்பட பல்வேறு சலுகைகள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு 6-வது ஊதிய கமிஷனின் பரிந்துரையை ஆக.14-ல் மத்திய அரசு அமல்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பளத்துக்கு இணையாக, ஊதியம் வழங்கப்படும் என சென்னையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில், கருணாநிதி அறிவித்தார்.
மேலும், ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு அலுவலர்களுக்கு நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே, மத்திய அரசு அலுவலர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதுபோல், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன்தாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதல்வர்அமைச்சர் கருணாநிதி கடந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி உத்தரவிட்டார்.
பின்னர், 6-வது ஊதியக்குழுவில் உள்ளபடி 3 மாத சம்பள நிலுவைத் தொகையை அரசு ஊழியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்மூலம் அரசுக்கு ரூ.4,247 கோடி செலவானது. பிறகு, தமிழக அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப் படியையும் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், பின்னர் அதனை 10 சதவீதமாக உயர்த்தி, முதல்வர் பிப்.23-ந் தேதி உத்தரவிட்டார். இதனால், அரசு ஊழியர்களுக்கு ரூ.400 முதல் ரூ.4,000 வரை மாதந்தோறும் கூடுதலாக கிடைத்தது.
இந்தநிலையில், தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு, பல்வேறு அலுவலர் சங்கங்களையும், அமைப்புகளையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளைப் பெற்று பரிசீலித்த பின்னர், தனது அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் நேற்று அளித்தது.
அப்போது, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, குழுவின் தலைவரான உள்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.மாலதி, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் எம்.குற்றாலிங்கம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் கே.என்.வெங்கட்ரமணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
குழுவின் அறிக்கையை பரிசீலித்து அரசு உரிய ஆணைகளை விரைவில் வெளியிடும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் விரைவில் 6வது ஊதியக்குழு பரிந்துரைகள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் கிடைக்கும் எனத் தெரிகிறது.