திருப்பதி மலையை சுற்றி 100 கிமீ இரும்பு வேலி!
திருப்பதி: தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி திருமலையை சுற்றிலும் சுமார் 100 கி.மீ. தூரத்துக்கு இரும்பு வேலியை அமைக்க ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
மிக அதிகமான பக்தர்கள் கூடும் இடமான திருப்பதி கோவிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ருந்து வருகிறது. இது குறித்து மத்திய உளவுத்துறை ஆந்திர அரசுக்கும், திருமலை தேவஸ்தானத்துக்கு அடிக்கடி எச்சரிக்கை விடுத்து வருகிறது.
அச்சுறுத்தல் இருக்கும் சமயங்களில் போலீசார் குவிக்கப்படுவதும், பின்னர் சில நாட்கள் கழித்து பாதுகாப்பு குறைக்கப்படுவதுமாக உள்ளது.
இப்படி அடிக்கடி பந்தோபஸ்தை கூட்டுவதும், குறைப்பதுமாக இருப்பதற்கு பதிலாக திருப்பதியை சுற்றிலும் எப்போதும் இருக்கும் வகையில் முழு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், திருப்பதி மலையை பாதுகாப்புப் பகுதியாக மாற்றவும் ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் திருமலையை சுற்றி அடர்ந்த காடுகள் இருப்பதால் தீவிரவாதிகள் அதன் வழியாக நுழைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இதையடுத்து மலையை சுற்றிலும் சுமார் 100 கிமீ தூரத்துக்கு இரும்பு வேலி அமைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் ஆந்திர முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
மேலும், இதற்கான திட்டப் பணிகளை ஆராய மாநில உளவுத்துறை டிஐஜி அரவிந்தராவ், மாநில பாதுகாப்பு பிரிவு ஐஜி அனுமந்தராவ், போலீஸ் சூப்பிரண்டு ஜேஜே முரளி, சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமா ரெட்டி ஆகியோர் தலைமையிலான குழுக்கள் அமைத்துள்ளார்.
இதையடுத்து இக்குழுவினர் திருப்பதி-திருமலை பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.