வாசனுக்கு கப்பல் போக்குவரத்து - தயாநிதி - அழகிரி -உரம்- ராஜாவுக்கு மீண்டும் தொலைத் தொடர்பு
கடந்த முறை திமுக (டி.ஆர்.பாலு) வசம் இருந்த கப்பல் போக்குவரத்துத் துறை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே.வாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எதி்ர்பார்த்தபடி மு.க.அழகிரிக்கு வேதி மற்றும் உரத்துறை, தயாநிதி மாறனுக்கு ஜவுளித்துறை அளிக்கப்பட்டுள்ளது. ராஜாவுக்கு மீண்டும் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை கிடைத்துள்ளது.
திமுகவைச் சேர்ந்த இணை அமைச்சர்களான பழனி மாணிக்கத்திற்கு மீண்டும் நிதித்துறை கிடைத்துள்ளது. நெப்போலியனுக்கு சமூக நீதி மற்றும் அமலாக்கம், ஜெகத்ரட்சகனுக்கு தகவல் ஒலிபரப்பு, காந்தி செல்வனுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் ஆகியவை கிடைத்துள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது அமைச்சர்களில் யாருக்குமே அடிப்படைக் கட்டமைப்புத் துறைகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ரயில்வே துறை இணை அமைச்சர் பதவி தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கிடைக்கவில்லை. மாறாக கர்நாடகத்தைச் சேர்ந்த முனியப்பா, கேரளாவைச் சேர்ந்த அகமது ஆகியோருக்கு அந்தப் பொறுப்பு போய் விட்டது. இதனால் தமிழகத்திற்கான ரயில் திட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
அதேசமயம், திமுக வசம் இருந்த கப்பல் போக்குவரத்துத் துறை தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் வாசனுக்குக் கிடைத்திருப்பதால் சேது சமுத்திரத் திட்டம் உயிர்ப்புடன் இருக்கக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
முக்கியத் துறைகள் அனைத்தும் காங்கிரஸ் வசம் இருப்பதால் தமிழகத்திற்குத் தேவையானதை செய்யும், திட்டங்களைப் பெற்றுத் தரும் பொறுப்பு காங்கிரஸ் தலை மேல் விழுந்துள்ளது.
மீராகுமாரிடம் நீர்வளம்..
முக்கிய துறையான நீர்வளத்துறை அமைச்சராக மீராகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டத்துறை வீரப்ப மொய்லியிடமும், மின்சாரத் துறை மீண்டும் சுஷில் குமார் ஷிண்டேவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அம்பிகா சோனி தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகவும், கமல்நாத் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும், வயலார் ரவி மீண்டும் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை அமைச்சராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முரளி தியோரா மீண்டும் பெட்ரோலியத்துறை அமைச்சராகியுள்ளார். மனித வள மேம்பாட்டுத் துறை கபில் சிபல் வசம் போயுள்ளது.
வர்த்தக அமைச்சராக ஆனந்த் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.