எஸ்டிடி-25 பைசா, லோக்கல் கால் 10 பைசா: ராஜா
ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் ஊழல் செய்துவிட்டதாக இவர் மீது வட இந்திய, ஆங்கில மீடியாக்கள் பாய்ந்தாலும் என்ன வகையான ஊழல் நடந்தது என்பதை விளக்கவில்லை.
மேலும் இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அதிமுக உள்பட யார் வேண்டுமானாலும் வழக்கும் தொடரலாம். ஆனால் அதையும் செய்யவில்லை.
ராஜாவுக்கு எதிராக ஒரு மாபெரும் தொலைத் தொடர்பு லாபி இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இவர்கள் வட இந்திய மீடியாக்களை கையில் போட்டுக் கொண்டு இவருக்கு அந்தப் பதவி மீண்டும் கிடைத்துவிடாமல் தடுக்க முயன்றன.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று தெரியவந்த நிலையில் மீண்டும் அவரையே தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக்கியுள்ளார் பிரதமர் மனமோகன் சிங்.
நேற்று ஒரு திருமண விழாவில் ராஜாவுக்கு ஆதரவாகப் பேசிய முதல்வர் கருணாநிதி ஆரிய-திராவிடப் போராட்டத்தைக் குறிப்பிட்டு, தலித் சமுகத்தைச் சேர்ந்த ராஜாவுக்கு எதிராக, ஒரு பிரிவு மீடியாக்கள் சதி செய்வதாகக் கூறியிருந்தார்.
முன்னதாக ராஜாவை அமைச்சரவையில் சேர்க்க முடியாது என்று பிரதமர் கூறியதாகவும் செய்தியைப் பரப்பியதும் இந்த மீடியாக்களும் லாபிகளும் தான் என கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இந் நிலையில் மீண்டும் அமைச்சரான ராஜா நிருபர்களிடம் பேசுகையில்,
தொலைபேசி கட்டணத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சீரிய நிர்வாகம் மூலமாக நாடு முழுவதும் எஸ்டிடி கட்டணத்தை நிமிடத்துக்கு 25 பைசாவாகவும் லோக்கல் கால் கட்டணத்தை நிமிடத்துக்கு 10 பைசாவாகவும் குறைக்கவுள்ளோம்.
3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தை இரண்டு மாதத்தில் முடிக்க நடவடிக்கை எடுப்பேன்.
வயர்லெஸ், வை-மேக்ஸ் அகண்ட அலைவரிசை, அரசு அலுவலகங்களில் கீழ்நிலை வரை கம்ப்யூட்டர்மயமாக்கல் ஆகியவற்றுக்கு எனது துறை முக்கியத்துவம் தரும்.
தபால் துறையையும் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றார்.