புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்காக போர் விமானம் ஓட்டிய பாக். பைலட்டுகள்?
கொழும்பு: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது அப்பாவித் தமிழர்களை சரமாரியாக அழித்தொழித்த இலங்கை போர் விமானங்களை, பாகிஸ்தான் விமானிகள் ஓட்டியதாக புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதை இலங்கை மறுத்துள்ளது. பாகிஸ்தான், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் சரமாரியாக செய்த பல்வேறு உதவிகளின் உபயத்தால், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வென்றுள்ளது இலங்கை. ஆனால் இந்த போரில் சிக்கி பலியானவர்கள் பெரும்பாலானோர் அப்பாவி தமிழ் மக்கள்தான்.
கடந்த சில மாதங்களில் மட்டும் பல்லாயிரக்கணக்கானோரை கொன்று குவித்து விட்டன இலங்கைப் படைகள்.
ராணுவம் மற்றும் கடற்படையின் தாக்குதலில் சிக்கி பலியானவர்களை விட விமானப்படையின் சரமாரியான, அபாயகரமான, நச்சுக் குண்டு வீச்சுக்குப் பலியானோர்தான் அதிகம்.
தடை செய்யப்பட்ட பல்வேறு அபாயகரமான குண்டுகளை வீசிக் கொன்று குவித்தது இலங்கை விமானங்கள். இந்த நிலையில், இலங்கைக்காக அந்நாட்டு போர் விமானங்களை பாகிஸ்தான் விமானப்படை பைலட்டுகள் செலுத்தியதாக புதிய புகார் எழுந்துள்ளது.
இதை இலங்கை விமானப்படை தலைமைத் தளபதி ரோஷன் கூனதிலகே மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கை விமானிகள்தான் இலங்கையின் போர் விமானங்களை இயக்கினர். வெளிநாட்டு விமானிகள் யாரும் இதை இயக்கவில்லை.
விடுதலைப் புலிகளின் 1900 மறைவிடங்களை சரியான முறையில் குறி பார்த்து தாக்கியது இலங்கை விமானப்படை. புலிகள் இயக்கத்தினரின் சந்திப்பு இடங்களையும் சரியாக தாக்கி அழித்துள்ளோம்.
கடற்புலிகளின் 52 பெரிய கப்பல்கள், கடற்புலிகளின் பல்வேறு மறைவிடங்களையும் தாக்கி அழித்துள்ளோம்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைதான் நேரடியாக மோதி வென்றுள்ளது. வேறு எந்த நாட்டின் விமானிகளும் எமக்காக போரிடவில்லை என்றார் கூனதிலகே.
ஆனால் பாகிஸ்தான் விமானிகளை பயன்படுத்திய காரணத்தால்தான் புலிகளின் மறைவிடங்களை சரியான முறையில் இலங்கை விமானப்படையினரால் தாக்க முடிந்தது. இலங்கை விமானிகளுக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை. எனவே இந்தப் போரில் பாகிஸ்தான் விமானிகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டிருப்பதாக பலமான பேச்சு அடிபடுகிறது.