ஈழத் தமிழர்களுக்கு இந்தியா அநீதி இழைக்கிறது-வைகோ
நெல்லை: ஐநா சபையில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்து, இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்துள்ளது என வைகோ தெரிவித்துள்ளார்.
நெல்லையில் மதிமுக சட்டதுறை செயலாளர் சுப்புரத்தினம் இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட வைகோ நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் ஏற்பட்ட துயரத்திற்கு காரணம் மத்திய அரசுதான். துயரம் என நான் சொல்வதை தப்பாக நினைத்து கொள்ள கூடாது. பிரபாகரன் உயிருடன் உள்ளார். தமிழர்கள் கருவறுக்கப்படுவதற்கு அரசு துணை நிற்கும்போது நாம் எதுவும் செய்ய முடியாது என்ற நிலையில் இருக்கின்றோம் என்பதுதான் துயரம்.
நாடு விடுதலை பெற தென்னாடு தான் முதலில் போராடியது. இந்த மண்ணுக்கும் வீர சரித்திரம் உண்டு. இன்று தமிழ் உணர்வு அழிக்கப்படுகிறது. ஈழதமிழர் வரலாற்றில் சிறிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் என் குரல் ஒலிக்காவிட்டாலும், மக்கள் மன்றத்தில் ஓங்கி ஒலிக்கும். இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு மீண்டும் தவறு செய்துள்ளது.
இலங்கை தமிழர்களை பாதுகாக்க ஐநா சபை மனித உரிமை ஆணையம் நடத்திய விவாதத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா ஓட்டளித்துள்ளது. யாருக்கும் ஏற்படாகத அநீதி இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
போரில் இலங்கைக்கு கிடைத்துள்ள வெற்றி தற்காலிகமானது. இந்திய ஆயுத, ராணுவ உதவியுடன் தான் இலங்கை போரில் வென்றது. கடந்த 5 மாதங்களில் 1 லட்சத்து 45 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றார் வைகோ.
தட்டிகேட்கும் தைரியம் கொண்டவர் வைகோ...
தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் பேசுகையில்,
எதை கண்டும் கலங்குவது தமிழர் பண்பு அல்ல. இலங்கை தமிழர்களுக்கு தோள்கொடுக்க நாம் முன்வர வேண்டும். வைகோ எம்.பி.யாக கூடாது என முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
வைகோ எம்.பி.யாக இருந்தபோது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் நேரடியாக கேள்விகேட்டு விவாதத்தில் ஈடுபட்ட துணிச்சல் மிகுந்தவர் வைகோ. தட்டிகேட்கும் குரல் பாராளுமன்றத்தில் வரக்கூடாது என திட்டமிட்டு அவரை தோற்கடித்துள்ளனர்.
கானகத்து புலிகள் ஆபத்தானவை. அடிபட்ட புலிகள் மிக ஆபத்தானவை. விடுதலை புலிகலை அழித்து விட்டோம் என கொக்கரிக்கிறது இலங்கை அரசு. புலிகள் கொரில்லா முறையில் தாக்குவர்.
கி.ஆ.பெ. விஸ்வநாதம் ஒரு முறை கூறும் போது, 2 ஆயிரம் ஆண்டு தமிழ் வரலாற்றில் பிரபாகரனை போல் ஒரு வீரன் யாரும் இல்லை என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட பிரபாகரனை அழிக்க யாரும் வரவில்லை. பிரபாகரன் நன்றாக இருக்கிறார். நலமுடன் இருக்கிறார்.
பிரபாகரன் விரைவில் வெளியே வருவார். அவர் இறந்ததாக கூறுவதை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நம்பவில்லை. இந்தியாவில் சீனாவின் அதிகாரம் வந்துவிட்டது. அதுவிரைவில் காங்கிரசுக்கு தெரியும் என்றார் நெடுமாறன்.