For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரபாகரன் இருக்கிறார் - அவரது தலைமையில் மீண்டும் போர் வெடிக்கும்: திருமா.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பிரபாகரன் மறையவில்லை. உயிருடன்தான் இருக்கிறார். அவரது தலைமையில் மீண்டும் ஈழத்தில் போர் வெடிக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

ஈழத்தில் வீர மரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கும், பலியான தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் நேற்று நடந்தது.

மன்றோ சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு திருமாவளவன் தலைமை தாங்கினார். தி.க. தலைவர் கி.வீரமணி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

ஊர்வலத்தில் ராஜபக்சே உருவ பொம்மை தூக்கிலிட்டபடி கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலம் அண்ணாசாலை வழியாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை சென்றடைந்தது.

அங்கு ஈழத்தில் வீரமரணம் அடைந்த விடுதலைப்புலிகளுக்கும் களப்பலியான தமிழர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துவதற்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் பெரிய மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது.

50 ஆயிரம் தமிழர்கள் இறந்ததற்காக 50 மெழுகுவர்த்தி வைக்கப்பட்டிருந்தது. ருமாவளவன், வீரவணக்கம் செலுத்தும் வகையில் பெரிய மலர்வளையம் வைத்து, பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார்.

கோழைப் பயல் ராஜபக்சே...

பின்னர் திருமாவளவன் பேசுகையில்,

ஒரே நாளில் 50 ஆயிரம் பேர்களை கொன்றுவிட்டு உலக மக்கள் பார்வையை மறைக்க பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாக சிங்கள இனவெறியன் கோழைப் பயல் ராஜபக்சே அண்டப்புழுகினான்.

கடந்த ஜனவரி 2-ந்தேதி கிளிநொச்சி பகுதியை ராணுவம் கைப்பற்றியது என்ற செய்தி அறிந்து மிகவும் துடித்துப் போனேன்.

அன்று முதல் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினோம். தமிழக தலைவர்களை சந்தித்துபேசினேன். ஆனால் அதில் எந்தவித பயனும் கிடைக்கவில்லை. ஜனவரி 15-ந்தேதி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினேன். இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்வதாக தலைவர்கள் கூறியதால் உண்ணாவிரதத்தை கைவிட்டேன்.

நான் உண்ணாவிரதம் இருந்ததை பார்த்து தமிழ் இன உணர்வால் பொங்கிய முத்துக்குமார் தீக்குளித்து உயிர் துறந்தார்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ ஆகியோரிடம் தனி அணி அமைப்போம் என்று மன்றாடினேன். ஆனால் டாக்டர் ராமதாஸ், வைகோ ஆகியோர் அ.தி.மு.க. அணியில் சேர்வதில் தான் குறிக்கோளாக இருந்தனர்.

அ.தி.மு.க. தேர்தலுக்கு முன்பு ஈழத்தை ஆதரிக்கவில்லை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தலுக்கு பிறகு ஈழத்தமிழர்கள் பற்றி பேசவே இல்லை.

எங்களை கூட்டணியில் சேர்க்க கூடாது என்று காங்கிரஸ் கூறியது. ஆனால் எங்கள் கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அதன்பிறகுதான் நாங்கள் தி.மு.க.கூட்டணியில் இடம் பெற்றோம். தி.மு.க.வோடு கூட்டு சேர்ந்ததில் எந்த குற்றமும் இல்லை. சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றோம்.

ஓடுக்கப்பட்ட மக்கள் வாழவும், தமிழர்கள் தலை நிமிரவும் பாடுபடுவேன். ஈழத்தமிழர்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்.

தேர்தல் பிரசாரத்திற்காக வந்த சோனியா காந்தியிடம் எப்படியாவது இலங்கையில் போரை நிறுத்த ஏற்பாடு செய்யுங்கள் உங்களை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினேன். ஆனால் இலங்கையில் லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

கடைசி நிமிடம் வரை இந்திய அரசு நமது வேண்டுகோளை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. இலங்கைக்கு சீனா உதவுகிறது. தா.பாண்டியன் போன்றவர்கள் சீனா உதவுவது பற்றி பேசமாட்டார்கள்.

நடேசன், புலித்தேவன், சார்லஸ் அந்தோணி ஆகியோர் இறந்த பிறகுதான் எம்.கே.நாராயணன் இலங்கை சென்றார். அதற்கு முன் செல்ல எத்தனை முறை சொன்னோம் கேட்கவில்லை.

நாங்களும் புலிகள்தான்...

நாங்களும் புலிகள் தான். நாங்கள் பிரபாகரனின் தம்பிகள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். ஈழத்தில் 4-வது கட்ட போர் முடிந்து விட்டது. 5-வது கட்ட போர் மீண்டும் பிரபாகரன் தலைமையில் வெடிக்கும் என்றார் திருமாவளவன்.

கூட்டத்தில்,

ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு பேரவையில் சிங்கள அரசுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தும்,

போர் மரபுகளை மீறி விடுதலைப்புலிகளின் முன்னணி தலைவர்களான நடேசன், புலித்தேவன் கொல்லப்பட்டதற்கு சர்வதேச வல்லுனர்களை கொண்டு விசாரணை நடத்தக் கோரியும்,

3 லட்சம் ஈழத்தமிழர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தவும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யவேண்டும். ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். தமிழீழத்தை மீட்டுத்தர விடுதலைப்புலிகளின் முன்னணி தளபதிகளோடு பேச்சுவார்த்தை நடத்த சர்வதேச சமூகத்தை கேட்டுக் கொண்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X